ரூ.4550 கோடி கொள்ளை.. திரும்பி வந்த ரூ.2620 கோடி.. கிரிப்டோகரன்சி உலகை உலுக்கிய ஹேக்கர்ஸ்.. கைவரிசை!
நியூயார்க்: கிரிப்டோகரன்சி உலகின் மிகப்பெரிய ஹேக்கிங் என்று வர்ணிக்கப்படும் பாலி நெட்வொர்க் ஹேக்கிங்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலி நெட்வொர்க் நிறுவனத்தில் செய்யப்பட்ட 4550 கோடி ரூபாய் ஹேக்கிங்கில் கிட்டத்தட்ட பாதி தொகையை ஹேக்கர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.. இவர்கள் ஏன் இந்த தொகையை திருப்பி கொடுத்தனர், இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி தற்போது உலகம் முழுக்க நவீன பொருளாதார புரட்சியாக உருவெடுத்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க் தொடங்கி இந்திய உள்ளூர் கோடீஸ்வரர்கள் வரை பலர் தற்போது கிரிப்டோகரன்சி பக்கம் தங்களின் கவனத்தை மொத்தமாக திருப்பி உள்ளனர். அதிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கிரிப்டோகரன்சி மதிப்பு பலரை இதை நோக்கி இழுத்து வருகிறது.
புதிய தொழில்நுட்பமான பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சி இயங்கி வரும் நிலையில் இதில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. ஹேக்கர்கள் கைவரிசை காட்டும் வகையில் சின்ன சின்ன ஓட்டைகளும், கள்ளச்சந்தையில் புழுங்குவதற்கு ஏற்ற வசதிகளும், மோசடி செய்வதற்கு என்றே பல இணையங்களும் கிரிப்டோகரன்சி உலகில் உள்ளது. எல்லா விஷயங்களை போலவே கிரிப்டோகரன்சியிலும் பூ பாதையும் இருக்கிறது.. சிங்கப்பாதையும் இருக்கிறது. சரி கிரிப்டோகரன்சி உலகில் நடத்தப்பட்ட ஹேக்கிங் விஷயத்திற்கு வருவோம்...

ஹேக்கிங்
நாம் பொதுவாக பயன்படுத்தும் ரூபாய், டாலர் போன்ற பணங்களை மாற்றுவதற்கு பண பரிவர்த்தனை அமைப்புகள் பல இடங்களில் இருக்கும். அமெரிக்கா செல்லும் போது ரூபாயை கொடுத்து டாலராக மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் இணையத்திலும் கிரிப்டோகரன்சி உலகில் இப்படி பண பரிவர்த்தனை, பண மாற்று அமைப்புகள் நிறைய உள்ளன. அதில் முக்கியமான நிறுவனம்தான் பாலி நெட்வொர்க். இதன் பெயரிலேயே அர்த்தம் இருக்கிறது. பல கிரிப்டோகரன்சிகளை பரிமாற்றம் செய்யும் நெட்வொர்க் அமைப்புதான் இது. உங்களிடம் இருக்கும் கிரிப்டோகரன்சிகளை வேறு ஒருவருக்கு அனுப்பவும், ஒரு வகையான கிரிப்டோகரன்சிகளை கொடுத்துவிட்டு வேறு வகையை பெற்றுக்கொள்ளவும் இந்த நிறுவனம் உதவும்.

முன்னணி நிறுவனம்
கிரிப்டோகரன்சி உலகில் முன்னணி நிறுவனமாக இது பார்க்கப்படுகிறது. தினமும் இங்கு பல மில்லியன் டாலர்கள் எளிதாக புழங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் பாலி நெட்வொர்க் நிறுவனம் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.. ஹேக்கர்கள் உள்ளே புகுந்து "என்ஜாயி எஞ்சாமி" என்று ஜாலியாக இருப்பதை எல்லாம் சுருட்டிவிட்டு டாட்டா காட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்திய மதிப்பில் இவர்கள் சுருட்டிய பணம் 4550 கோடி ரூபாய். எவ்வளவு ஜீரோ வருகிறது என்று பக்கத்தில் போட்டு நீங்களே ஆச்சர்யப்பட்டுக்கொள்ளுங்கள்.

ஆனால்
இவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஹேக்கர்கள் எளிதாக புகுந்து கோடி கோடியாக "அபேஸ்" செய்தது கிரிப்டோகரன்சி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாலி நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்த சிறிய தொழில்நுட்ப கோளாறுகள், துளைகளை வைத்து இந்த ஹேக்கிங் நொடிப்பொழுதில் நடந்து இருக்கிறது. ஆனால் இந்த ஹேக்கிங் நடந்த ஒரு வாரத்தில் நேற்று இதில் 2620 கோடி ரூபாயை ஹேக்கர்கள் திருப்பி கொடுத்துள்ளனர். இந்த பணம் ஏன் திருப்பி கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும் இதற்கு இரண்டு முக்கிய காரணம் இருப்பதாக பாலி நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது .

காரணம் 1
பாலி நெட்வொர்க் நிறுவனத்தின் கூற்றுப்படி, நாங்கள் அந்த ஹேக்கர்களை நெருங்கிவிட்டோம். ஹேக்கிங் செய்யும் போது அவர்கள் விட்டு செல்லும் அடையாளங்களை வைத்து அவர்களை நெருங்கிவிட்டோம். விரைவில் அவர்கள் யார் என்று கண்டுபிடித்துவிடுவோம், இதனால் எங்களின் விசாரணையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மேலும் விசாரிக்க கூடாது என்பதற்காக தற்போது 2620 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். இது சமாதான தூது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரணம் 2
இன்னொரு பக்கம், இந்த கிரிப்டோகரன்சிகளை கொள்ளையடித்த பின் அதை ஹேக்கர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி உள்ளனர். இதை சிவாஜி படத்தில் ரஜினி லாண்டரி செய்வது போல செய்ய வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிகளை எளிதாக லாண்டரி செய்ய முடியாது. அதை ரியல் கரன்சியாக மாற்றுவதும் கடினம். எளிதாக சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதிலும் திருடப்பட்ட இந்த கிரிப்டோகரன்சிகளின் நிறுவனங்கள் அதை பிளாக் செய்யும் முடிவில் உள்ளது.

மதிப்பு
திருடப்பட்ட அந்த குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பிளாக் செய்யப்பட்டால் அதை வாங்குபவர்களுக்கும் பயன் இருக்காது, ஹேக் செய்த இவர்களுக்கும் எதுவும் கிடைக்காது. இதனால் இந்த பணத்தை என்ன செய்வது, எப்படி பயன்படுத்துவது என்றும் தெரியாமல் பாதியை ஹேக்கர்கள் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதியை இவர்கள் விரைவில் திருப்பி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவே பணத்தை இவர்கள் திருப்பி தர காரணம்.

யார் இவர்கள்?
பாலி நெட்வொர்க் நிறுவனத்தில் ஹேக்கிங் செய்த இந்த கும்பல் அல்லது தனி நபர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இவர்களின் கருத்து என்று இணையத்தில் சில செய்திகள் உலவி வருகிறது. அதன்படி கிரிப்டோகரன்சி உலகில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை வெளிக்காட்டவே இந்த ஹேக்கிங் நடத்தி உள்ளோம். இதை நாங்கள் காசுக்காக செய்யவில்லை. பணத்தை நாங்கள் திருப்பி கொடுத்துவிடுவோம் என்று ஹேக்கர்கள் கூறியதாக் செய்தி ஒன்று உலவி வருகிறது. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கிரிப்டோகரன்சி உலகம் பிரபலம் ஆகி வரும் நிலையில் திடீரென அதில் ஏற்பட்டு இருக்கும் இந்த மிகப்பெரிய ஹேக்கிங் கிரிப்டோகரன்சி பயன்பாட்டாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications