ஆளு நெறைய பேரு இருக்கீங்க ஆனா வேலைதான் ஒன்னும் நடக்கல... கடுப்பான சுந்தர் பிச்சை
நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள இந்திய வம்சாவளியான சுந்தர் பிச்சை சமீபத்தில் நடந்த மீட்டிங் ஒன்றில் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையதளம் தொடங்கிய காலத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பல்வேறு சர்ச் என்ஜின்களை பின்னுக்குத் தள்ளி தற்போது கூகுள்தான் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என்கிற புகார் மேலெழுந்துள்ளது. தற்போது நடந்த ஊழியர்களுக்கான உயர்மட்ட கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்துள்ளது.
கூகுள் நிறுவனத்திலும் சாதியா? தலித் பேச்சாளருக்கு தடை.. சுந்தர் பிச்சை மீதே புகார் -மேலாளர் ராஜினாமா
வருவாய் குறைவு
கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இயங்கி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியான புள்ளி விவரங்களின் அடிப்படையில், நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்த வளர்ச்சியைவிட நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் சுமார் 13 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதனை தொடர்ந்து சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்யும் பணியை செய்து, அடுத்த 3 மாதங்களுக்கு, முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை ஒழுங்குபடுத்துவதற்கான பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. நிறுவனத்திற்கு புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணியையும் நிறுவனம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பணியாளர்களின் வேலைகளில் திருப்தியடையவில்லை என்றும் வேலையில் கவனம் செலுத்துமாறும் சுந்தர் பிச்சை ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.
அதிக ஊழியர்கள்
அதே நேரத்தில் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது அதிக ஊழியர்கள் இருந்தும் பணிகள் மந்தமாகவே நடப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்கள் உடனடியாக தங்களது முழு உற்பத்தி திறனையும் பணியில் செலுத்த வேண்டும் என்றும், தனி திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது காலாண்டில் தற்போது 69.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது. இது மேற்குறிப்பிட்டதைப்போல கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவிகிதம் குறைவு.
பணி நீக்கம்?
வருவாய் குறைவு, ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்மட்ட அளவில் கூட்டம் என அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பணி நீக்கம், சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கூகுள் சென்றுவிடுமோ என்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். ஆனால் தற்போது வரை நிறுவனம் பணி நீக்க நடவடிக்கைக்குள் செல்லவில்லை என்பதுடன், இப்படியான யோசனை எதுவும் இல்லையென்றும் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.