வெறும் வாய் மட்டும்தானா..! டிரம்ப் நடவடிக்கைக்கு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி!
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்திருக்கிறது.
இந்த தடையால் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கின் டீமுக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தடையை அமெரிக்க அரசு ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்கா அரசு நிறைய தேவையற்ற செலவுகளை செய்து வருகிறது. எனவே இந்த செலவை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபராக தேர்வான அடுத்த நாளே சில அதிரடி நடவடிக்கைகை எடுத்தார். குறிப்பாக எலான் மஸ்க்கை வைத்துக்கொண்டு அரசு துறைகளை காலி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.
செலவுகளை குறைக்க வேண்டுமெனில், இஸ்ரேலுக்கும், உக்ரைனுக்கும் வழங்கப்பட்டு வரும் நிதியை வெட்டினாலே போதுமானதுதான். அதாவது உக்ரைனுக்கு தற்போது வரை 69.2 பில்லியன் டாலர் (ஏறத்தாழ ரூ.6 லட்சம் கோடி) வரை உதவி செய்யப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு, 20 பில்லியனுக்கும் (ஏறத்தாழ ரூ.1.7 லட்சம் கோடி) அதிகமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதை குறைப்பதற்கு பதிலாக, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த டிரம்ப் யோசித்தார்.
ஒப்பீட்டளவில் இஸ்ரேலுக்கும், உக்ரைனுக்கும் செலவிடப்படுவதை விட, அமெரிக்காவின் அரசு ஊழியர்களுக்கு சில லட்சம் கோடிகள்தான் அதிகமாக செலவாகிறது.
இருப்பினும் டிரம்ப் அரசு ஊழியர்கள் மீதுதான் கை வைக்க தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் சிஐஏ, எஃபிஐ, நாசா என மொத்தம் 400 துறைகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள அரசு ஊழயர்களின் எண்ணிக்கையை 75% ஆக குறைக்க வேண்டும் என்பதே டிரம்ப்+எலான் மஸ்க்கின் இலக்கு. மட்டுமல்லாது தேவையில்லாத துறைக்கு நிதியை வெட்டவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதற்கு இவர்கள் கையில் எடுத்த யோசனை 'Fork in the Road' திட்டம். இந்த திட்டம் மூலம் அரசு ஊழியர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
1.அவர்கள் வேலையை விட்டு சென்றுவிட வேண்டும் (Voluntary retirement).
2.போக விருப்பமில்லாதவர்கள் வேலையில் தொடரலாம்.
இந்த இரண்டில் முதல் வாய்ப்பை தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நிதி வழங்கப்படும். ஆனால் வேலை வாய்ப்பு குறைந்து வரும் இந்த காலத்தில் வேலையிலிருந்து விலகிக்கொள்வது அவ்வளவு நல்ல யோசனையாக இருக்காது.
இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தாலும் சிக்கல்தான். வேலையை தொடர்வதாக முடிவெடுத்தால், வேலை பளுவை அதிகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 100 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 75 பேர்தான் இருப்பார்கள். எனவே டென்ஷன் அதிகமாகி ஏதாவது தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும்போது நிர்வாகம் டிஸ்மிஸ் நடவடிக்கை கூட எடுக்கலாம். அப்படி மட்டும் நடந்துவிட்டால் இத்தனை வருஷம் வேலை பார்த்ததற்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.
இதற்கு பெயர்தான் 'Fork in the Road' திட்டம். இந்த திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கை மாவட்ட நீதிபதி ஜார்ஜ் ஓ'டூல்(George O'Toole) என்பவர் விசாரித்தார். இதில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, டிரம்பின் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு அந்நாட்டின் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அடுத்தக்கட்ட விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரணையின் இறுதியில்தான் எந்த தரப்பு வெற்றிபெற்றது என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications