ஆப்பு வைக்கும் அமெரிக்கா.. இந்தியாவிற்கான சலுகையை நிறுத்த முடிவு? இரவோடு இரவாக டிரம்ப் பிளான்!
நியூயார்க்: சர்வதேச அரசியல் களத்தில் எப்போதுமே 'ஹாட் டாபிக்' எண்ணெய் வர்த்தகம்தான். இப்போது அதில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒரு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையில்லாச் சலுகையை (Sanctions Waiver) இனி நீட்டிக்கப்போவதில்லை என அமெரிக்கா கறாராக அறிவிக்க உள்ளது.

முடிவுக்கு வந்த சலுகை: பெசன்ட்டின் 'ஸ்ட்ரிக்ட்' மெசேஜ்!
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஏற்கனவே கடலில் பயணித்துக்கொண்டிருந்த (On the water) ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்காக மார்ச் 11-ம் தேதி வரை ஒரு சிறிய தளர்வை அமெரிக்கா அளித்திருந்தது. ஆனால், இனி அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசன்ட்.
"அந்த எண்ணெய் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இனி பொது உரிமத்தை (General Licence) நீட்டிக்கப்போவதில்லை. ஈரானியப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயார்," என அதிரடியாக எச்சரித்துள்ளார் பெசன்ட்.
ஆபரேஷன் 'எகனாமிக் ஃபியூரி' (Economic Fury)!
இது ஏதோ சாதாரண பொருளாதாரத் தடை அல்ல. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்திருக்கும் ராணுவ நடவடிக்கையான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'க்கு இணையாக, நிதியியல் ரீதியாக ஈரானை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனை 'எகனாமிக் ஃபியூரி' (பொருளாதார ஆக்ரோஷம்) என்றே அமெரிக்க அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள்.
குறிப்பாக, ஈரானிய எண்ணெய்யை வாங்கும் சீனா போன்ற நாடுகளையும் குறிவைத்து, கடல்வழி முற்றுகையைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.
தவிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி: ஒரு பக்கம் போர்... மறுபக்கம் அமைதிப் பேச்சு!
மத்திய கிழக்கு ஆசியப் போர் தொடங்கியதில் இருந்தே, உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் முடக்கி வைத்திருக்கிறது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது.
இருப்பினும், ஒரு சிறிய ஆறுதல் செய்தியாக, ஓமனில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, ஓமன் கடல் பகுதி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நம்பிக்கையாலேயே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று காலை சற்று சரிந்துள்ளது.
இந்தியாவின் நிலை என்ன?
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியாவுக்கு இது ஒரு சவாலான சூழல்தான்.
ரஷ்ய எண்ணெய்: கடந்த சில வாரங்களாகக் கிடைத்த தளர்வுகளால் இந்தியா அதிகப்படியான ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்தது. இனி அதற்குச் சிக்கல் எழலாம்.
ஈரானிய எண்ணெய்: நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கடந்த வாரம்தான் ஈரானிடமிருந்து சுமார் 4 மில்லியன் பேரல் எண்ணெய் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் இந்த வர்த்தகம் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்திய அரசு தரப்பில் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. நம்மிடம் போதுமான எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும், பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கும் வலுவான 'சோர்ஸிங் ஸ்ட்ரேட்டஜி' (Sourcing Strategy) வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்த 'பொருளாதாரப் போர்' ஈரான் மற்றும் ரஷ்யாவை எந்தளவுக்குப் பாதிக்கும், அதன் விளைவாக இந்திய பெட்ரோல் பங்குகளில் விலை ஏறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications