'தேங்க்யூ' சொல்ல மாட்டீங்களானு கேட்டது குத்தமாய்யா? இதுக்கு கூடவா கொலை பண்ணுவீங்க.. பகீர் சம்பவம்
நியூயார்க்: 'என்ன பாஸ் தேங்க்யூ சொல்ல மாட்டீங்களா' என சாதாரணமாக கேட்ட ஒருவர், கண்மூடித்தனமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வர வர மனிதர்களிடத்தில் பொறுமை என்ற குணமே இல்லாமல் போய்விட்டதாகவே தெரிகிறது. சாதாரண விஷயங்கள் கூட வன்முறையிலும், கொலையிலும் சென்று முடிந்து விடுகின்றன. இந்த நாடு அந்த நாடு என பாரபட்சம் ஏதும் இல்லாமல், உலகம் முழுவதுமே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அதுவும், இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் அதிக அளவில் நடைபெறுகின்றன. பதவி உயர்வு தராததால் தனது முதலாளியின் குடும்பத்தையே கொலை செய்த பணியாளர்; தான் கார் நிறுத்தும் இடத்தில் வேறொருவர் கார் நிறுத்தியதால் காருடன் அவரை எரித்துக் கொன்ற நபர் என சிறிது கூட பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் நடக்கும் கொலைகள் அந்நாடுகளில் அதிகரித்து விட்டன.
அந்த வகையில், அமெரிக்காவில் நேற்று ஒரு மோசமான வன்முறை சம்பவம் நடந்திருக்கிறது. அதுகுறித்து விபரம் வருமாறு:

ரெஸ்டாரண்ட் கதவை திறப்பதில் குழப்பம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சென்றுள்ளார். அதே சமயத்தில், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்துவிட்டு ராபர்ட் க்ரூக் (47) என்ற நபர் வெளியே வந்திருக்கிறார். அப்போது இருவரும் கதவுக்கு எதிரெதிரே இருந்ததால், கதவை யார் திறப்பது என்பதில் சில நொடிகள் குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து, உள்ளே இருந்த ராபர்ட் க்ரூக் கதவை திறந்து, வெளியே இருப்பவரை உள்ளே அழைத்திருக்கிறார். அவரும் உள்ளே சென்றுள்ளார்.

"தேங்க்யூ சொல்ல மாட்டீங்களா.."
அப்போது கதவை திறந்துவிட்ட ராபர்ட், அந்த நபரை அழைத்து, "உங்களுக்காக நான் கதவை திறந்துவிட்டேனே., அதற்கு ஒரு நன்றி (தேங்க்யூ) கூட சொல்லக்கூடாதா?" என வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ, "நான் உங்களை கதவை திறந்துவிட சொன்னேனா? இதுபோன்று பேசும் வேலையை என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்" எனக் கூறியுள்ளார். இதனால் சாதாரணாக தொடங்கிய அவர்களின் உரையாடல் காரசாரமாக மாறியது.

கைகலப்பு - சவால்...
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இருவரும் மாறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து, ராபர்ட் க்ரூக்கை பார்த்து மற்றொரு நபர், "உனக்கு இன்று நல்ல நேரம் என நினைக்கிறேன். இல்லையென்றால் உன்னை கொலை செய்திருப்பேன்" எனக் கூறியுள்ளார். அதற்கு ராபர்ட் க்ரூக், உனக்கு தைரியம் இருந்தால் அதை செய் பார்க்கலாம்" எனக் கூறியிருக்கிறார்.

கத்திக்குத்து..
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், உடனடியாக வெளியே சென்று தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெரிய கத்தியை எடுத்து வந்து, ராபர்ட் க்ரூக்கை வயிறு, மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபர்ட் க்ரூக்கை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நியூயார்க் போலீஸார், சிசிடிவி கேமரா காட்சியை அடிப்படையாக கொண்டு, ராபர்ட் க்ரூக்கை கொலை செய்தவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications