சர்வாதிகார நடவடிக்கை.. டிரம்ப் சதி வேலைகளை செய்கிறார்.. பிடனுக்கு பென்டகன் அதிகாரிகள் வார்னிங்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள டிரம்ப்.. வெள்ளை மாளிகையை கைப்பற்றவும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்கவும் சதி வேலைகளை செய்வதாக பிடனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இது தொடர்பாக ஜோ பிடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் படுதோல்வி அடைந்துள்ளார். 214 எலக்ட்ரல் வாக்குகளை மட்டுமே வென்று தோல்வி அடைந்துள்ள டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். 290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ள பிடன்.. அடுத்த அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தோல்வி
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும்.. தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் பிரச்சனை செய்து வருகிறார். நான் இன்னும் தோல்வி அடையவில்லை. தேர்தல் முடிவுகள் இனிதான் வரும். இன்னும் ஒரு வாரத்தில் அதிபர் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். அதிபராக தொடர்ந்து நான் நீடிப்பேன் என்று டிரம்ப் டிவிட் செய்து வருகிறார்.
என்ன சொல்கிறார்
ஒரு பக்கம் டிரம்ப் இப்படி பேச இன்னொரு பக்கம்.. அமெரிக்க அரசின் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் அதிகாரி மைக் பாம்பியோ ஒருபடி மேலே போய், டிரம்ப்தான் அடுத்த அதிபர் என்று கூறியுள்ளார். அதிபராக டிரம்ப் பதவி ஏற்பதற்கான சுமுகமான பணிகளை செய்து வருகிறோம். ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது, என்று மைக் பாம்பியோ குறிப்பிட்டு இருந்தார்.
இரண்டு பேர்
இப்படி வரிசையாக இரண்டு பேரும் அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்துள்ள நிலையில்தான் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். டிரம்பிற்கு எதிராக குரல் கொடுத்த அதிகாரிகள் மாற்றப்பட்டு .. டிரம்பின் விசுவாசிகள் பென்டகனில் உயர் பதவிகளை பெற்று வருகிறார்கள்.
பென்டகன்
இரண்டு நாட்களுக்கு முன் பென்டகனின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் நீக்கப்பட்டார். மார்க் எஸ்பர் நீக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இன்னும் 3 உயர் அதிகாரிகள் பென்டகனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எஸ்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிரம்பிற்கு நெருக்கமான கிறிஸ்தபர் மில்லர் பாதுகாப்பு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெருக்கமான அதிகாரிகள்
இதேபோல் டிரம்பிற்கு நெருக்கமாக இருக்கும் மூன்று முக்கிய அதிகாரிகள் உயர் பதவிகளை பெற்றுள்ளனர். ராணுவத்தை கட்டுப்படுத்தும் பென்டகனில் இப்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னொரு பக்கம் ஜோ பிடனுக்கு அளிக்க வேண்டிய உளவு தகவல்கள், நிதி உதவிகளையும் டிரம்ப் அளிக்க மறுத்துள்ளார். டிரான்சிஷன் விதிப்படி பழைய அதிபர் புதிய அதிபருக்கு.. உளவு தகவல்கள், நிதி உதவி , அதிகாரிகளை அளிக்க வேண்டும்.
பிடன் உதவி
ஆனால் பிடன் தரப்பிற்கு இப்படி எந்த விதமான நடைமுறை உதவியும் செய்யப்படவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் பிடனை அதிபராக பதவி ஏற்பதை டிரம்ப் கொஞ்சம் கூட விரும்பவில்லை. இதை எப்படியாவது தடுக்கலாம் என்று பார்க்கிறார். குடியரசு கட்சியிலும் புஷ்ஷை தவிர வேறு யாரும் டிரம்பிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
சர்வாதிகாரம்
இந்த நிலையில், அதிபரின் செயல் சர்வாதிகார திட்டமாக இருக்கலாம் என்று பென்டகன் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பென்டகனில் இருந்து நீக்கப்பட்டு அதிகாரிகள் இது குறித்து பிடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், டிரம்ப் ஒருவேளை சர்வாதிகார திட்டங்களை மனதில் வைத்து இது போன்ற நடவடிக்கைளை செய்து இருக்கலாம் என்று பிடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெருக்கம்
அதேபோல் டிரம்பிற்கு நெருக்கமான அவரின் உறவினரான மேரி டிரம்ப் இது குறித்து கூறுகையில், டிரம்ப் தனது தோல்வியை வெற்றிகொள்ள வேண்டும். பிடன் வெற்றி நேர்மையானதுதான். இதை டிரம்ப் எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அரசை கைப்பற்ற அவர் சதி வேலைகளை செய்கிறார். பிடன் கவனமான இருக்க வேண்டும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்... டிரம்பிற்கு நெருக்கமான உறவினர் ஒருவர் இப்படி எச்சரிக்கை விடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.