வெடவெடக்குதே.. உறைபனியில் உருகும் ஊட்டி.. நீலகிரியே நடுங்குதே.. அசந்துபோன சுற்றுலா பயணிகள்..!
உதகையில் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்
நீலகிரி: ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 24.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பொங்கல் பண்டிகை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்துள்ளனர்.
ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும்.. ஆனால், இந்த வருடம், காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின...
அதனால், இந்த முறை பனிக்காலமும் சற்று லேட்டாகவே தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் முழுக்க நீர் பனிப்பொழிவின் தாக்கம் ஏற்பட்டது..
அடிக்குது குளிரு..நீலகிரி கோவையில் உறைபனி..அதிகாலை பனி மூட்டம்..பகலில் சுள் வெயில்
புல்வெளி புல்வெளி
பிறகு, நவம்பர் 22-ம் தேதி ஊட்டியில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டது. அப்போதுதான், மேன்டூஸ் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்றுவிட்டது... இதற்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊட்டியில் மறுபடியும் உறைபனியின் தாக்கம் நிலவியது.. அப்போது, ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் பனி படர்ந்து நிறைந்திருந்தது.. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடந்தது.
புடைக்கும் நரம்புகள்
உதகை மக்கள் இந்த தொடர் பனிப்பொழிவால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த வாரம் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் ஓரளவு அதிகரித்த நிலையில், மறுபடியும் கடும் குளிர் வாட்ட தொடங்கிவிட்டது.. பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி தருகிறது.. பகல் நேரங்களில் ஓரளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை 3 மணிக்கே குளிர் சூழ்ந்துவிடுகிறது.. அதிகாலை 9 மணி வரை இந்த குளிர் விலகாமல் உள்ளது.. இதனால், நரம்புகளே புடைத்து கொள்ளும் அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது .
மினி காஷ்மீர்
ஊட்டி நகரம், தலைகுந்தா, காந்தள் பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.. வாகன ஓட்டிகள், உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குளிரை சமாளிக்க வேண்டிய நிலையும் உள்ளது.. இந்த பனியிலும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஊட்டியை ரசித்து செல்கிறார்கள்.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உறைபனி, 2 டிகிரி செல்சியஸ் தொட்டுவிட்டது.. புல்வெளிகள், மரம், செடி, வாகனங்களில் பனிக்கட்டிகள் படிந்து கிடக்கின்றன.. இதனால் ஊட்டியே, ஒரு "மினி காஷ்மீர்" போல காணப்பட்டு வருகின்றன..
கடந்த வாரம், உறைபனிபொழிவானது, கடும் தாக்கத்தை தந்து வரும் நிலையில், நகர பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி போனது. இந்த மாதம் இறுதிவரை இப்பனி பொழிவு இப்படியேதான் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை ஊட்டி நகரமே பனியால் மூடிவிட்டது.. பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது... ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், ரேஸ்கோர்ஸ், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி பனி கொட்டிக்கிடந்தது..
அவிலாஞ்சி
ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 24.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. அவலாஞ்சி அணை பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அவலாஞ்சி அணையில் உறைபனி காரணமாக தண்ணீர் ஆவியாக மாறியது... அதேபோல, நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற இடங்களிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக நிலவிவருகிறது.. குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது. இப்போது பொங்கல் பண்டிகை கால தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர்..
நடுங்கிய பயணிகள்
இவர்கள் புற்கள் மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து காணப்படும் உறபனியை கையில் எடுத்து கண்டு ரசிக்கின்றனர். அதனை போட்டோ, வீடியோவும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர். காலையில் ஆர்வமாக ஊட்டியை சுற்றிப்பார்க்க கிளம்பும் சுற்றுலா பயணிகள், மதியம் 3 மேல் மணிக்குமேல் குளிரில் நடுங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருப்பர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
டூரிஸ்ட்கள்
தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர். நேற்று பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர்... ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்... புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர்..
போட் ஹவுஸ்
இதேபோல் ஊட்டி போட் ஹவுஸிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ரோஸ் கார்டன், பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா போட் ஹவுஸ், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை காணும் பொங்கல் என்பதால், இன்னும் ஏராளமானோர் ஊட்டிக்கு வர வாய்ப்புள்ளது.. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் நிலவுதால், இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.