"வூஹான்" கோயம்பேடு? ஊட்டி லாரி டிரைவர்களுக்கு கொரோனா டெஸ்ட்.. கிலியில் நீலகிரி!
ஊட்டி லாரி டிரைவர்கள் 60 பேருக்கு சளி மாதிரி டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது
ஊட்டி: ஊட்டியில் 60 லாரி டிரைவர்களுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டது... இவர்களில் பெரும்பாலானோர் கடந்த வாரம் கோயம்பேட்டுக்கு சென்று, லோடு இறக்கிவிட்டு வந்தவர்கள் ஆவர்.. இதனால் நீலகிரியே ஒருவித கிலியில் உள்ளது!
சென்ற மாதம் 8 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று ஊட்டிக்கு திரும்பியிருந்தனர்.. இதில் 4 பேருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரையும் உடனடியாக தனி வார்டில் அனுமதித்து டெஸ்ட் செய்யப்பட்டது.
அதில் சம்பந்தப்பட்ட 30 பேரில் 28 பேருக்கு தொற்று இல்லை என தகவல் வெளியானது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
பச்சை
இதனால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது... இதற்கெல்லாம் முக்கிய காரணம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான். பொது முடக்கம் அமலுக்கு வருவதற்கு முன்பே நீலகிரி மாவட்ட எல்லைகள் இழுத்து மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டன!! அதனால்தான் தொற்றே இல்லாத நீலகிரி மாறியது.. இதனால் மலை மாவட்ட மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கலெக்டர்
நீலகிரியில் மே 4 முதல் அதாவது இன்று முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் 2 நாட்களுக்கு முன்பும் அறிவித்தார். மேலும் காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைக்காய்கறிகள் வெளிமாவட்டங்களுக்கு லாரிகளில் தினமும் விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
தொய்வு
இந்நிலையில் வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு நீலகிரிக்குள் வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதில் தொய்வு ஏற்பட்டதாக ஒரு புகார் வரவும், அதை பற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஊட்டி டிரைவர்களுக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எல்லாருமே லாரி டிரைவர்கள்.. அத்தியாவசிய பொருட்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் லாரி, பிக்--அப் டிரைவர்கள் ஆவர்.
ரத்த, சளி மாதிரிகள்
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, சுமார் 100 டிரைவர்கள் வரவழைக்கப்பட்டனர்.. அதில், சில டிரைவர்கள் ஊரடங்கு நேரத்தில் எங்கும் செல்லவில்லை என தெரிந்தது. அதனால் 60 டிரைவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு அலுவலர் செந்தில்குமார் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பொடி வழங்கினார். இவர்கள் லோடு எடுக்க கோயம்பேடு சென்று வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கோயம்பேடு
இவர்களில் 40 பேர் சென்னை வந்துள்ளனர்.. அதில் 27 பேர் கோயம்பேடு மார்கெட்டுக்கு காய்கறிகளை இறக்கி விட்டு திரும்பி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு யார் யார் சென்று வந்தார்கள் என்பதை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாரி சங்கங்கள் மூலமும் மற்றவர்களுக்கு தொடர்ந்து டெஸ்ட் எடுக்கப்பட உள்ளது. கோயம்பேட்டுக்கு சென்று வந்தவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அங்கெல்லாம்கூட பரிசோதனை விரிவடையும் என தெரிகிறது.