ஊட்டிக்கு டூர் போறீங்களா? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் - தொட்டபெட்டா சிகரம் மீண்டும் திறப்பு
நீலகிரி : உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான தொட்டபெட்டா மண்சரிவு காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து இயற்கையின் பேரழகை ரசித்துச் செல்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் தமிழகத்திலேயே மிக உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் சுற்றுலா பயணிகள் நாளொன்று பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

கொரோனாவால் மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்
அங்கு அமைக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் நீலகிரி மாவட்டத்தின் இயற்கைக் காட்சிகள் மற்றும் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன.

கனமழையால் மண்சரிவு
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் பழுதடைந்தன. இதனால் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லக்கூடிய சாலையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தொட்டபெட்டாவுக்கு செல்லும் பாதையை தற்காலிகமாக அடைத்து கடந்த நவம்பர் மாதம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

ரூ.34.75 லட்சம் செலவியில் சீரமைப்பு பணி
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தொட்டபெட்டா சுற்றுலா தளம், காட்சி முனை மூடப்பட்டு பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் சுமார் ரூ.34.75 லட்சம் செலவில் மேற்கொள்ளபட்டு வந்தன. தொட்டபெட்டா மூடப்பட்டதால் 10 மாதங்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மீண்டும் திறக்கப்பட்ட தொட்டபெட்டா
தற்போது சாலை பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளதால், தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தொட்டபெட்டா காட்சிமுனையை இன்று திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் தொட்டபெட்டா காட்சி முனை 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications