கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. 2017ல் கோவையில் சிக்கிய ‘பேப்பர்’ - கிளறிய தனிப்படை போலீஸ்!
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செந்தில் குமார் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் ஆவார். ஆறுமுகசாமி கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் எடுக்கும் டெண்டர்களைப் பெற்றவர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில், அதிமுக தலைமைக்கு நெருக்கமானவரின் மகன் விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்கடுக்கான கேள்விகள்! கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் போலீசார் தீவிர விசாரணை
கோடநாடு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோரிடம் தனிப்படை விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் நிலவி வரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மோதல் சூழலில் கோடநாடு வழக்கு தீவிரமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகசாமி மகன்
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆறுமுகசாமி
இந்த ஆறுமுகசாமி அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர். ஆறுமுகசாமி அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். இவரது மகனான செந்தில் குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். செந்தில் குமார் செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
2017ல் ரெய்டு
கடந்த 2017ஆம் ஆண்டு மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஆறுமுகசாமியின் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் மேட்டுப்பாளையத்திலுள்ள செந்தில் ப்ரூட்ஸ், செந்தில் பேப்பர் போர்டு காகித ஆலை ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள்
ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில் குமாருக்கு சொந்தமான 7 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது, செந்தில் பேப்பர் போர்டு காகித ஆலை உள்ளிட்ட இடங்களில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த ஆவணங்கள்
இந்நிலையில், செந்தில் பேப்பர் போர்டு நிறுவனத்திலிருந்து வருமான வரித்துறையினர் கடந்த 2017ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கோடநாடு பங்களாவிலிருந்து திருடப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
திடீர் திருப்பம்
கோடநாடு பங்களாவில் இருந்து மாயமான ஆவணங்கள் செந்தில் குமாரின் நிறுவனத்தில் இருந்ததாக சந்தேகம் கிளம்பியுள்ளதால், கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து வேறொரு வழக்கில் விசாரணை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.