தமிழகம் தான் முதலிடம்! மத்திய பாஜக அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்! என்ன சொன்னார் தெரியுமா?
நீலகிரி: பெண்களுக்கான முத்ரா கடன் உதவி வழங்கும் திட்டத்தில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் உற்பத்தி செய்யும் கலைப் பொருட்களை வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் பாஜக-வை வலுவாக காலூன்றும் வகையில், அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் சாதனைகளை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, மத்திய அரசின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியிலிருந்து துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் சார்பில் ஆய்வு மேற்கொண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.
வெடிவழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போடவே பட்டாசு வெடிக்க தடை?புதிய ஆங்கிளில் எதிர்க்கும் அர்ஜூன் சம்பத்
எல். முருகன் ஆலோசனை
அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் பால்வளத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மத்திய தகவல் ஒலிப்பரப்பு துறை என அனைத்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அமித் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீலகிரியில் பல்வேறு திட்டங்கள்
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன், தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் மரப்பாலம் முதல் கூடலூர் வரை 138 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கால்நடை பராமரிப்பு துறை கீழ் கூடலூரில் 36 லட்சம் மதிப்பில் சான எரிவாயு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். அதேபோல் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு திட்டங்கள்
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பேரும், அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வீதம் 48 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 40 கோடி டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளதாக எல். முருகன் கூறினார்.
பிரதமரின் மருத்துவ காப்பீடு
பாரதப் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 47 ஆயிரம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை மருத்துவ செலவு செய்து கொள்ள காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி உடன் கூடிய மருத்துவமனையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பாரம்பரிய கலைப் பொருட்கள்
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், இருளர், குறும்பர், பணியர், கோத்தர், காட்டுநாயக்கர் என பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள்
தமிழகத்தில் மாவட்டம் தோறும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க எதுவாக 391 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் மொபைல் யூனிட் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.