காதல் திருமணங்களை தடுக்கத்தான் பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுகிறது! சொல்வது ஜனநாயக மாதர் சங்கம்
ஊட்டி: பெண்கள் திருமண வயதை உயர்த்த ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் ஜனநாயக மாதர் சங்க பேரவைக் கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயமோள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தலைவர் லீலா வாசு, உரையாற்றினார். பிறகு, ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி கூறுகையில் திருமண வயது தொடர்பான விவகாரம் வந்தது.

ஆய்வு செய்யாத முடிவுகள்
இதோ அவர் கூறியதாவது: அரசு வங்கிகளில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நேரடிக்கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். பெண்களுக்கு நலன் தரும் பல விஷயங்களை மத்திய அரசு செய்திருக்கலாம். ஆனால், மத்திய பாஜக அரசு அடிப்படையை ஆராயாமல், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 என்று உயர்த்தியுள்ளது.

காரணம் என்ன தெரியுமா
காதல் திருமணம் மற்றும் ஜாதி கலப்பு திருமணத்தை தடுக்கதான், பெண்ணின் திருமண வயதை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதனால் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெண்களுக்கு ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பேறுகால மரணத்தை தடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. கடந்த ஊரடங்கு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 7,000 குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக புள்ளி விவரங்கள் உள்ளன. இவ்வாறு சுகந்தி தெரிவித்தார்.

பிரதமர் விருப்பம்
சென்ற வருடம் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அம்சங்களை குறிப்பிட்டு பேசுகையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தார். தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஒரு குழு அமைத்து பரிசீலனை நடத்தப்படும் என அறிவித்தார்.

ஜெயா ஜெட்லி குழு
சென்ற வருடம் ஜூன் மாதத்தில், ஜெயா ஜெட்லி தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வீ.கே. பால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றனர். இந்தக் குழு பல கட்டங்களாக கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வுகளை நடத்தியிருந்தது. அதில், பங்கேற்ற பெரும்பாலானோர், பெண்களின் அதிகாரபூர்வ திருமண வயதை 22 அல்லது 23 ஆக நிர்ணயிக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

சட்டம் நிறைவேறவில்லை
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற்று, குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications