கொரோனா பரவல் திடீர் வேகம்..பிசிஆர் சோதனைகளிலும் தெரிவதில்லை.. பிரான்சில் பரவும் புதிய உருமாறிய வைரஸ்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ், வழக்கமான பிசிஆர் சோதனைகளிலிருந்து தப்பிவிடுவதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. அந்நாட்டில் முதியவர்கள் மக்கள்தொகை கணிசமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் உருமாறிய கொரோனா
இந்நிலையில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போலவே புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மற்ற கொரோனா வகைகளைவிட ஆபத்தானதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிசிஆர் சோதனைகளில் தப்பிவிடுகிறது
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பிரான்சில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளிலிருந்து தப்பிவிடுகிறது. எனவே, இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவில் தெரியவரும். இதனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அச்சம் தேவையில்ல
அதேநேரம் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வரை 6 முதல் எட்டு பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா குறித்த கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உருமாறுவது ஏன்
பொதுவாகவே கொரோனா வைரஸ் என்று இல்லாமல், அனைத்து வகையான வைரஸ்களும தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பருவநிலையைச் சமாளிக்கவும் தடுப்பூசிகளில் இருந்து தப்பவும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். இது வழக்கமான நிகழ்வுதான் என்றாலும், கொரோனா வைரஸ் இப்படித் தொடர்ந்து உருமாறுவதால் தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் கொரோனா பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 38 ஆயிரம் பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சை பலனிற்றி 267 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை 41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.