நம்மூர்லயாவது ரோட்டு சைடுல நின்று கையசைப்பாங்க.. பீகாரில் குறுக்கே கயிறே கட்டுறாங்களாம்.. பரிதாபம்
பாட்னா: உலக பசி குறியீட்டில் இந்தியா 107வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களின் நிலை குறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதாவது, தமிழ்நாட்டிலிருந்து பைக் ரைட் சென்ற இளைஞர்களை வழிமறித்த சிறார்கள் அவர்களிடம் யாசகம் கேட்கின்றனர். தமிழர்கள் மட்டுமல்லாது அம்மாநிலத்தை சேர்ந்தவர்களிடமும் சிறார்கள் யாசகம் கேட்கின்றனர்.
இது தொடர்பான வீடியோதான் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பசி தீர்ப்பவர்களுக்கு இந்த நிலையா? ஸ்விகி.. சொமேட்டோ.. 'தனிச்சட்டம் வேண்டும்’ - சீமான் கோரிக்கை!
பட்டினி குறியீடு
உலகம் முழுவதும் மனிதர்களால் மருந்தே கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நோய்களில் பட்டினியும் ஒன்று என சொல்வதுண்டு. இவ்வாறு இருக்கையில் மொத்தமுள்ள 121 நாடுகளில் பட்டினி குறித்து ஆய்வு செய்து அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட் வைட் நிறுவனமும், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே நிறுவனமும் நேற்று அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது. நமது அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினியால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்டை நாடுகள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சமீபத்தில் பாஜகவினர் பெருமை தெரிவித்திருந்தனர். உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும், இதற்கு பாஜக தலைமையிலான அரசுதான் காரணம் என்றும் கூறியிருந்தனர். இவ்வாறு இருக்கையில், பாகிஸ்தான், இலங்கை, சூடான் ஆகிய நாடுகளைவிடவும் பட்டினி குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது என அரசியல் கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அதேபோல உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரும் இந்தியாவில்தான் இருக்கிறார், உலகில் அதிக அளவில் பட்டினியால் வாடுபவர்களும் இந்தியாவில்தான் இருக்கின்றனர் என்றும் அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
பீகார் நிலைமை
இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாட்டிலிருந்து நேபாலுக்கு பைக் ரைட் சென்ற குழுவினர் பீகாரில் எதிர்கொண்ட சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சிறார்கள் சிலர் நெடுஞ்சாலையை மறித்து அவ்வழியே பயணம் மேற்கொள்பவர்களிடம் யாசகம் கேட்கின்றனர். ஒவ்வொரு 500 மீட்டருக்கு ஒரு சிறார் குழு இதேபோல யாசகம் கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா என தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் மக்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோதான் உதாரணம் என அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலர் கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் நிலைமை
இந்தியாவின் மிகவும் வறுமை மிகுந்த மாநிலங்கள் குறித்து கடந்த ஆண்டு 'நிதி ஆயோக்' வெளியிட்டுள்ள தரவுகளின்படி பீகார் மாநிலம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் சுமார் 51.91 சதவிகித மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளனர். கல்வியறிவு, தொழிற்சாலை வசதிகள், விவசாயத்திற்கு போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது ஆகியவை இந்த வறுமைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதே தென்மாநிலங்களை எடுத்துக்கொண்டால், கேரளாவில் 0.71%, தமிழ்நாட்டில் 4.89% என வறுமை விகிதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.