பீகாரில் பரபரப்பு: ஓவைசி கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கூண்டோடு லாலுவின் ஆர்ஜேடியில் ஐக்கியம்!
பாட்னா: பீகாரில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கூண்டோடு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியில் இணைந்ததால் அம்மாநில அரசியலில் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 243 எம்.எல்.ஏக்களைக் கொண்டது பீகார் சட்டசபை. இம்மாநிலத்தில் பாஜக 77 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இதுவரை இருந்து வந்தது. 2-வது பெரிய கட்சியாக 75 எம்.எல்.ஏக்களுடன் லாலுவின் ஆர்ஜேடியும் 3-வது பெரிய கட்சியாக நிதிஷ்குமாரின் ஜேடியூ 45 எம்.எல்.ஏக்களையும் கொண்டிருந்தது.
பீகாரில் புதிய திருப்பமாக தெலுங்கானா அரசியல் கட்சியான ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது. ஓவைசி கட்சியின் இந்த விஸ்வரூபம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கவும் வைத்தது. இதனையடுத்து நாட்டின் பல மாநிலங்களின் ஓவைசி அரசியல் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் ஓவைசி கட்சியின் மொத்தம் 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் ஒட்டுமொத்தமாக நேற்று லாலுவின் ஆர்ஜேடி கட்சியில் இணைந்தனர். இது ஓவைசி கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் பீகார் சட்டசபையில் ஆர்ஜேடியின் பலம் இப்போது 80 ஆகவும் அதிகரித்துள்ளது. பீகார் சட்டசபையில் தனிப்பெரும் அரசியல் கட்சியாக ஆர்ஜேடி உருவாகி உள்ளது.
பீகார் சட்டசபையில் தற்போதைய பலம்:
- எதிர்க்கட்சிகள் கூட்டணி: 114
- ஆர்ஜேடி- 80
- காங்கிரஸ்- 19
- இடதுசாரிகள் -15
- பாஜக கூட்டணி: 126
- பாஜக - 77
- ஜேடியூ- 45
- ஹெச்.ஏ.எம்-4
பீகாரில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 122