ஒரு குழந்தை பிறந்து 3 மாதத்தில் மற்றொரு குழந்தையா?.. பீகாரில் மெடிக்கல் மிராக்கிள்?.. நடந்தது என்ன?
பாட்னா: பீகாரில் குழந்தை பிறந்த பெண்ணுக்கு அடுத்த 3 ஆவது மாதத்தில் மற்றொரு குழந்தை பிறந்த வினோதச் சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தி டிசம்பர் மாதத்தில் நடந்திருந்தாலும் தற்போது வேகமாக பகிரப்படுகிறது.
ஒரு குழந்தை பிறப்பதற்கு பெண்ணுக்கு எப்படியும் 10 மாதங்கள் ஆகும். அடுத்து கர்ப்பம் தரிக்க குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். இது ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையை பொறுத்தது.
இந்த நிலையில் பீகார் மாநிலம் ஹர்பூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா ரீட்டா தேவி. இவருக்கு 28 வயதாகிறது. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர் உஜியர்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

பெண்
அப்போது அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுக்கும் ஏழை தாய்மார்களுக்கு ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் மூலம் பீகார் அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியை இந்த பெண் வாங்கிவிட்டார்.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
இந்த நிலையில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் குறித்த பட்டியலை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது மேற்கண்ட ரீட்டா தேவியின் ஜூலை 24 ஆம் தேதி குழந்தை பெற்றது பதிவாகியுள்ளது. அது போல் நவம்பர் 4-ஆம் தேதியும் அவரது பெயர் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இரு விவரங்கள்
அது எப்படி ஒரு குழந்தை பிறந்து 3 மாதத்தில் மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுக்க முடியும் என்பதால் அந்த மருத்துவ பதிவேடுகள் ஆராயப்பட்டன. ஒரு வேளை ஒரு பெயரில் இரு பெண்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இரு விவரங்களும் ஒன்றாகவே இருந்தது.

ஊழல்
இதையடுத்து இந்த திட்டத்தில் பணத்தை பெற ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆரம்ப சுகாதாரத் துறையினர் புரிந்து கொண்டனர். அப்போதுதான் வேறு ஒரு பெண்ணை பிரசவத்திற்கு சேர்க்க அழைத்து வரும் போது ரீட்டா தேவி அந்த பெண்ணின் பெயருக்கு பதிலாக தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை அளித்து இரண்டாவது முறையாக அரசின் நிதியுதவியை பெற ஊழல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் நடந்த செய்தி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications