ஊரடங்கில் 1200 கிமீ சைக்கிள் மிதித்த 'பீகார் சிறுமி'.. ஜோதியின் தந்தை மரணம்
பாட்னா: பீகாரின் 'சைக்கிள் பெண்ணின்' தந்தை மோகன் பாஸ்வான், மாரடைப்பால் காலமானார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் தந்தையை பின் சீட்டில் அமர வைத்து 1200 கிலோமீட்டர் சைக்கிள் ஒட்டி பிரபலமான பீகார் சிறுமி ஜோதியின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
கொரோனா பாதிப்புகளை தடுக்க கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி என்ற 15 வயது சிறுமியின் தந்தை அரியானாவின் குருகிராம் நகரில் சிக்கி கொண்டார்.

மோகன் பாஸ்வானை அவரது முதலாளி அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் துரத்திவிடுவார் என்ற அச்சம் இருந்தது கையில் காசும் இல்லை, ரயில் , பஸ் என எந்த வசதியும் இல்லை. உணவுக்கும் திண்டாடினார்.
காலில் காயம் அடைந்த தனது தந்தைய சிறுமி ஜோதி சைக்கிளில் பின்னால் அமரவைத்து 1,200 கி.மீ. தொலைவுக்கு 10 நாட்களாக பயணித்து சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து சென்றார். ஜோதி கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கி மே 16 ஆம் தேதி தனது வீட்டை அடைந்தார்.
இது சமூக வலைதளங்களிலும் வைரலானது. ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில் ஊரடங்கில், காயமடைந்த தந்தையை பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்றதால் பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் அவரது சொந்த ஊரான தர்பங்கா நகரில் மாரடைப்பால் காலமானார். ரிக்ஷா ஓட்டுனரான மோகன் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் மாரடைப்பால் பலியாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications