“டீ குடிக்கும் போது கிளாஸையும் விழுங்கிட்டேன்”.. பீகார் மருத்துவர்களை பதற வைத்த 55 வயது முதியவர்!
பீகாரில் அறுவைச் சிகிச்சை மூலம் முதியவரின் வயிற்றில் இருந்து டம்ளர் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் டீ குடிக்கும் போது முதியவர் ஒருவர் டீ டம்ளரையும் சேர்த்து விழுங்கி விட்டதாக கூறியிருப்பது அதிர்ச்சியையும், வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து அந்த டம்ளரை மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.
எதை எடுத்தாலும் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் சிறு குழந்தைகளுக்கு உண்டு. சமயத்தில் அவை தொண்டையில் சிக்கி உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதால், குழந்தைகளைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வயதான தாத்தா ஒருவர், ஒரு டம்ளரையே விழுங்கி விட்டதாக உறுதியாகக் கூறுகின்றனர் பீகாரில் உள்ள ஒரு குடும்பத்தினர்.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் தான் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தமா?.. உண்மை என்ன?.. மருத்துவமனை இயக்குநர் விளக்கம்!
ஸ்கேன்
மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக, மடிப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு, 55 வயது முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிசைக்காக அங்கு அந்த முதியவரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், குடல் பகுதியில் ஏதோ பெரிய பொருள் அடைத்துக் கொண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவர்கள் அதிர்ச்சி
எனவே, அந்தப் பொருளை எண்ட்டோஸ்கோபி மூலம் வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் அது இயலவில்லை. எனவே, அறுவைச் சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுக்க மருத்துவர் முகமதுல் ஹாசன் தலைமையிலான மருத்துவக்குழு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்து உள்ளே பார்த்த போது, அந்த முதியவரின் வயிற்றில் ஒரு டம்ளர் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாய்ப்பே இல்லை
பின்னர் அந்த டம்ளரை வெளியில் எடுத்த மருத்துவர்கள், இது பற்றி அந்த முதியவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் எப்படி அந்த டம்ளர் முதியவரின் வயிற்றுக்குள் சென்றது என விசாரித்தனர். அதற்கு அவர்கள், 'ஒருநாள் டீ குடிக்கும் போது டீ டம்ளரை அந்த முதியவர் விழுங்கி விட்டதாகக்' கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியதில் உண்மை இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
திரும்பத் திரும்ப...
காரணம் உணவுக்குழல் பகுதி மிகவும் குறுகலானது. அதில் டம்ளர் போன்ற பெரிய பொருட்கள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பேயில்லை என்பது மருத்துவர்களின் வாதம். ஆனால் அந்த முதியவரின் குடும்பத்தாரோ எப்படிக் கேட்டாலும் அதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்கிறார்களாம். எனவே மேற்கொண்டு அவர்களிடம் மருத்துவர்கள், உண்மையைக் கேட்டு வற்புறுத்தவில்லை.
இதுதான் ஒரே வழி
மருத்துவ உலகின் கூற்றுப்படி, அவரது வயிற்றுக்குள் அந்த டம்ளர் சென்றிருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது அந்த முதியவர் தனது ஆசனவாய் வழியாக அந்த டம்ளரை குடல் பகுதிக்குள் திணித்திருக்க வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்து. அது உண்மையெனும் பட்சத்தில் அந்த முதியவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி தெரியவில்லை.
மருத்துவக் கண்காணிப்பு
குடல் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அந்த முதியவர் பூரணமாக குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. 'தற்போது அந்த முதியவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரிடம் வயிற்றுக்குள் எப்படி டம்ளர் சென்றது எனக் கேட்டால், அவரும் டீ குடிக்கும் போது விழுங்கி விட்டதாகவே கூறுவதாகவும்' தெரிவித்துள்ளார் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் முகமதுல் ஹாசன்.