தேர்வில் "பிட்" பேப்பரை கொடுத்த சிறுவன்! லவ் லெட்டர்னு நினைத்து வீட்டில் சொன்ன மாணவி! பறிபோனது உயிர்
பாட்னா: தேர்வு சமயத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் காரணமாக பீகார் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவனின் உயிர் அநியாயமாகப் பறிபோய் உள்ளது.
கொரோனா எல்லாம் முடிந்த பிறகு இப்போது தான் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. சுமார் இரு ஆண்டுகளுக்குப் பின் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.
மாணவர்களும் ஆர்வமாகப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தேர்வுகள் எல்லாம் வழக்கம் போல நடக்கத் தொடங்கி உள்ளன.
கல்லூரி தேர்வில் நூதன முறையில் 'பிட்'.. வேற லெவலில் யோசித்த மாணவர்.. 'பத்ரி விஜயை' மிஞ்சிய சம்பவம்!
பீகார்
இதனிடையே பீகார் மாநிலத்தில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மாணவி தவறாகப் புரிந்து கொண்டதாலும், மாணவி சொன்னதைக் கேட்டு ஆத்திரப்பட்ட சகோதரர்களாலும் அநியாயமாக ஒரு உயிரே பறிபோய் உள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சில சிறார்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
லவ் லெட்டர்
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. அங்கு இப்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த 12 வயது சிறுவன் பிட்டை எடுத்துச் சென்று உள்ளான். தவறுதலாக அது மற்றொரு மாணவி அமர்ந்து இருந்த இடத்தில் விழுந்துவிட்டது. இதை அவர் காதல் கடிதம் என்று நினைத்ததே பிரச்சினைக்கு முதல் காரணம். இது அப்படியே விஸ்வரூபம் எடுத்து கொடூர கொலையில் முடிந்து உள்ளது.
பிட் பேப்பர்
கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 12 வயதான தயா குமார் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவன் அங்குள்ள மற்றொரு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். அரையாண்டு தேர்வுக்கு தயா குமார் தனது சகோதரியை அழைத்துச் சென்று உள்ளான். தனது அக்கா எப்படியாவது நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று நினைத்த அந்த மாணவன் அக்காவுக்காகப் பிட்டையும் கையோடு எடுத்துச் சென்று உள்ளான்.
மற்றொரு மாணவி
இந்த சிறுவனுக்கு அன்று தேர்வு இல்லை என்பதால் அவன் உள்ளே செல்லவில்லை. அவனது அக்காவும் அவர்களுடன் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிகளும் வழக்கம் போலத் தேர்வை எழுதத் தொடங்கி உள்ளனர். இது தான் சரியான நேரம் என்று கருதிய தயா குமார் வெளியே இருந்து ஜன்னல் வழியாக பிட் பேப்பரை அக்காவிடம் போட்டுள்ளான். இருப்பினும், அது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மற்றொரு மாணவி அருகே விழுந்துவிட்டது.
ஆத்திரப்பட்ட சகோதரர்கள்
யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென தேர்வு சமயத்தில் பேப்பரை போட்டதால், அதை அந்த மாணவி காதல் கடிதம் என்று நினைத்துவிட்டார். இதனால் பயந்துபோன அந்த மாணவி தனது சகோதரர்களிடம் இது குறித்துத் தெரிவித்து உள்ளார். அந்த மாணவி தான் எதோ பயத்தில் கூறிவிட்டார் என்றால் இவர்களும் அதை என்னவென்று விசாரிக்காமல் நேரடியாகச் சிறுவன் தயா குமாரை தேடிச் சென்றுவிட்டனர்.
கொலை
அக்காவுக்காகப் பிட்டை தூக்கி வீசிய அந்த சிறுவனைப் பிடித்து இந்த வயசில் உனக்கு லவ் கேக்குதா என்றே சிறுமியின் சகோதரர்கள் தாக்கி உள்ளனர். அத்துடன் மட்டும் விட்டுவிடாமல் அந்த சிறுவனை இவர்கள் கடத்திச் சென்றும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரம் நடந்து சுமார் நான்கு நாட்களுக்குப் பின்னரே, அந்த சிறுவனின் உடல் பாகங்கள் அருகே உள்ள ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டன.
9 பேர்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்த போலீசார் சிறுமியின் குடும்பத்தினரைக் கைது செய்தனர். நான்கு மைனர்கள் உள்ளிட்ட 9 பேர் சிறுவனை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் இப்போது கைது செய்து உள்ளனர். இச்சம்பம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.