அதுதான் "சோனியா".. ஒரே போன் காலில் பீகார் அரசியலை புரட்டி போட்டது எப்படி? நிதிஷிடம் சொன்னது என்ன?
பாட்னா: பீகாரில் அரசியலில் இன்று மிக முக்கியமான நாள். வந்தான்.. போனான்.. ரிப்பீட்டு என்று சொல்வது போல பதவி ஏற்பு.. ராஜினாமா.. ரிப்பீட் என்று மீண்டும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2010 - 2014 வரை பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் 2015ல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார். அந்த கூட்டணியை பாதியில் 2017ல் முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவோடு நிதிஷ் குமார் கூட்டணி வைத்தார்.
2020ல் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் 2 வருடத்தில் மீண்டும் நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் புதிய ஆட்சி- ஜேடியூவுக்கு முதல்வர்; ஆர்ஜேடிக்கு து.முதல்வர், உள்துறை; காங்.-க்கு சபாநாயகர்?
கூட்டணி
இந்த முறை மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தள வளர்ச்சியை தடுத்து பாஜக வளர பார்க்கிறது என்று நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இந்த கூட்டணி முறிந்த நிலையில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உதவியுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பீகாரில் பெரும்பான்மை பெற 127 இடங்கள் தேவை. இதில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 80, சிபிஐக்கு 12, சிபிஎம்க்கு 2, காங்கிரசுக்கு 19 இடங்கள் உள்ளன. இவர்கள் கூட்டணி வைத்தால் பீகாரில் எளிதாக ஆட்சி அமைக்க முடியும் என்பதால் சிக்கல் இல்லை!
அறிகுறிகள்
பீகாரில் பாஜக கூட்டணியை முறிப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகளை நிதிஷ் குமார் வழங்கினார். பல சமிக்கைகள் மூலம் "All is not well" என்று குறிப்பாக உணர்த்தினார். முக்கியமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடி தலைமை வகித்த இந்த கூட்டத்தில் 23 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஏன் மோடியை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட கலந்து கொண்டார். ஆனால் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை.
நிதிஷ் ஆப்சென்ட்
அதேபோல் கடந்த ஜூலை 11ம் தேதி சுதந்திர தின திட்டமிடலுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுடன் நடத்திய கூட்டத்திலும் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. பின்னர் ஜூலை 22ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடியை தனியாக சந்திப்பதை நிதிஷ் குமார் தவிர்த்தார். அதேபோல் அதற்கு முன்பாக கொரோனா தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனையிலும் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை.
நிதிஷ் திட்டம்
கடந்த சில நாட்களாகவே கூட்டணியை முறிக்கும் முடிவில்தான் நிதிஷ் குமார் இருந்ததாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை நிதிஷ் குமார் காத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் எதிர்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதும் கடினம். ஏனென்றால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், தேஜஸ்வி யாதவும் நிதிஷ் குமாரை நம்ப மாட்டார்கள். முக்கியமாக தேஜஸ்வி யாதவ் மீதே ஊழல் புகாரை வைத்தவர் நிதிஷ் குமார்.
தேஜஸ்வி யாதவ்
அப்படி இருக்கும் போது நிதிஷ் குமாரை ஏற்றுக்கொள்ள தேஜஸ்வி தயங்கியதாக கூறப்படுகிறது. இந்த குழப்பம் நிலவிய போதுதான் சோனியா காந்தி இவர்களுக்கு இடையில் பாலமாக அமைந்தார் என்று தேசிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை.. ஆம் நிதி ஆயோக் கூட்டம் நடந்த அதே நாள் இரவு சோனியாவிற்கு நிதிஷ் குமார் போன் செய்துள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து சந்தேகத்துடன் பேசி இருக்கிறார்.
சந்தேகத்துடன் பேச்சு
இந்த போன் காலில் தேஜஸ்வியை சம்மதிக்க வைப்பதாக சோனியா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதாவது நிதிஷ் குமார் - தேஜஸ்வி இடையே உள்ள குழப்பத்தை சரி செய்ய சோனியா முன் வந்ததாகவும், இவர்களுக்கு இடையில் மீண்டும் "ஹாட் லைனை" உருவாக்க சோனியா தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஒரு போன் கால்தான் பீகாரில் மொத்தமாக நிலைமையை மாற்றியது. இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை போக்கும் வகையில் சோனியா காந்தி பேசியதாக கூறப்படுகிறது.
சோனியா பேச்சு
முக்கியமாக தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி. அடுத்த சட்டசபை தேர்தலில் தொடரும் கூட்டணி. 2025 தேஜஸ்விதான் முதல்வர் வேட்பாளர் என்று பல கண்டிஷன்களை சோனியா போட்டுள்ளார் என்கிறார்கள். கட்சியை காக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சோனியாவின் கண்டிப்பிற்கு நிதிஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்யும் அளவிற்கு முடிவு எடுத்ததற்கு சோனியாவின் இந்த போன் கால் முக்கியமானது என்கிறார்கள்.