லோக்சபா தேர்தல் சர்வேயில் ட்விஸ்ட்! பீகாரில் சறுக்கும் பாஜக-நிதிஷ் கூட்டணி’.. முன்னேறும் ‛இந்தியா’
பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி மீண்டும் இணைந்து இருந்தாலும் கூட அவர்களின் ஓட்டு சதவீதம் இந்த முறை குறையும். மேலும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 7 தொகுதிகள் வரை ‛இந்தியா' கூட்டணியிடம் இழப்பார்கள் என இந்தியா டூடே சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வெளியேறி பாஜகவுடன் இணைந்துள்ளது.

இதனால் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை என்பது 27 என குறைந்துள்ளது. மேலும் பீகாரில் காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அவர் முதல்வராக அங்கு பொறுப்பேற்று வருகிறது.
மீண்டும் பாஜக ஆதரவில் பீகார் முதல்வராகி உள்ள நிதிஷ் குமார் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீடு செய்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்த விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டு மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் அதிக இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலை விட பாஜக தலைமையிலான கூட்டணி வென்ற இடங்களின் எண்ணிக்கை என்பது சரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் வென்றது. அதாவது பாஜக 22, நிதிஷ் குமாரின் ஜேடியூ 11, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இந்த முறை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 32 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 7 தொகுதிகளில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் ஒரு தொகுதியில் ஜெயித்து இருந்தது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணிக்கு 8 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 53 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை ஓட்டு சதவீதம் என்பது 52 ஆக சரியும் என கூறப்பட்டுள்ளது. மாறாக கடந்த முறை 31 சதவீத ஓட்டுகளை பெற்ற ‛இந்தியா' கூட்டணி இந்த முறை 38 சதவீத ஓட்டுகளை அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றவர்கள் வரும் தேர்தலில் 10 சதவீதம் வரை ஓட்டுகளை பெறுவார்கள் என இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications