நிதிஷ்குமார் பிடிவாதம்... முறுக்கி கொண்டு நிற்கும் லோக் ஜனசக்தி.. பீகாரில் என்ன நடக்கிறது..?
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடே முடியாமல் உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பிடிவாதத்தால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது பாஜக.
லோக் ஜனசக்தி கட்சிக்கு கேட்ட சீட்களை நிதிஷ் கொடுக்க மறுப்பதால் அந்தக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.
பீகார் தேர்தல்: ஆர்ஜேடி- 145; காங். 70; இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டி- நாளை அறிவிப்பு!
தே.ஜ.கூ. விரிசல்
பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3, 7, ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்கான முதற்கட்ட வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி கூட தொடங்கிவிட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவடையவில்லை. இதற்கு காரணம் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பிடிக்கும் பிடிவாதம் தான். கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு அவர்கள் கேட்கும் சீட்களை ஒதுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் நிதிஷ்.
பீகார் தொகுதிகள்
பீகாரில் மொத்த 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 124 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் எனத் தெரிகிறது. எஞ்சியுள்ள 119 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளான பாஜக, லோக் ஜனசக்தி, ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளன. அந்த 119 தொகுதிகளில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு நிதிஷ் வெறும் 27 இடங்கள் மட்டுமே ஒதுக்குவதாக தெரிகிறது.
143 தொகுதிகள்
லோக் ஜனசக்தி கட்சிக்கு 60 தொகுதிகளுக்கு குறைத்து சீட் கொடுத்தால் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் உட்பட 143 தொகுதிகளில் தனித்து களம் காண தாங்கள் தயாராக உள்ளோம் என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிராக் பாஸ்வான். இவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் ஆவார். தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் இருப்பதால் தேர்தல் பணிகளுக்கு தலைமையேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார் சிராக்.
மகன் 16 அடி
சிராக் பாஸ்வான் சின்னப் பையன் தானே என நினைத்த நிதிஷ்குமாருக்கு அவருடைய ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதிர்ச்சியும் கலக்கமும் அளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி வெளியேறுவதை பாஜக தலைமை விரும்பவில்லை. ராம்விலாஸ் பாஸ்வான் அரசியல் 8 அடி பாய்ந்தால் அவரது மகன் சிராக் பாஸ்வான் 16 அடி பாய்கிறார்.
மக்கள் அனுதாபம்
லாலு பிரசாத் சிறைவாசம், உடல்நலக் குறைவு என உள்ள நிலையில் மக்களின் அனுதாபம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் லோக் ஜனசக்தியும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதனால் பாதகம் தான் ஏற்படும் எனக் கருதுகிறது பாஜக. இது தொடர்பாக நிதிஷ்குமாரிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அவர் பிடிக்கும் பிடிவாதத்தால் கூட்டணியில் குழப்பம் நீடித்துக்கொண்டே செல்கிறது.
ராம் விலாஸ் பாஸ்வான்
ராம் விலாஸ் பாஸ்வானை பொறுத்தவரை அவரை அரசியல் வானிலையாளர் என்று தேசியத் தலைவர்கள் பலரும் வர்ணிப்பார்கள். மக்களின் மனநிலை, அரசியல் எதிர்காலம், கட்சியின் நலன் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு அவர் கணிக்கும் கணிப்புகள் பொய்த்ததில்லை. இந்நிலையில் இன்று அவரது இடத்தில் நின்று அரசியல் ஆடுபுலி ஆட்டத்தை நடத்தி வருகிறார் சிராக் பாஸ்வான். இவரின் துணிச்சலான முடிவுக்கு லோக் ஜனசக்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.