நிதிஷ் குமாருடன் 'பிகே' ரகசிய மீட்டிங்.. ‘மெகா பிளான்’.. பெரிய குறி! மாறி மாறி அட்டாக் பண்ணதெல்லாம்?
பாட்னா : பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று இரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், திடீரென சந்தித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் - நிதிஷ் குமார் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மீட்டிங் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 தேர்தலில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக தகவல்கள் பரவி வரும் சூழலில் இந்த திடீர் ரகசிய ஆலோசனை அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.
நிதிஷ், ஹேமந்த் சோரனுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்போம் என சொன்ன மமதா- ஸ்டாலின் பேரை சொல்லலையே?
தேர்தல் வியூக நிபுணர் பிகே
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இவரது ஐ பேக் நிறுவனம் நாடு முழுவதும் தேர்தல் வியூக வகுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார்.
நிதிஷ் கட்சியில்
பீகார் தேர்தல் முடிந்தபின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவரானார். அதன்பிறகு நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகினார் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டார் பிரசாந்த் கிஷோர்.
திமுக + திரிணாமுல்
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வியூக வகுப்பு பணியில் ஈடுபட்டார் பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் பின்னர் காங்கிரஸில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. 2024 மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
காங்கிரஸ் உடன் பேச்சு
காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார் பிகே. இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது நிபந்தனைகளுக்கு காங்கிரஸில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காங்கிரஸில் இணையப்போவதில்லை என அறிவித்தார்.
பாதயாத்திரை திட்டம்
இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பிரசாந்த் கிஷோர், "உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது." எனப் பதிவிட்டார். இதனால், பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்குவதாக பரபரப்பு ஏற்பட்டது. 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி முதல் 3,000 கி.மீ தூர பாத பீகாரின் சம்பாரனில் இருந்து தொடங்குறேன். அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன். அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு எனது திட்டத்தில் இல்லை" என அறிவித்தார்.
மாறி மாறி தாக்கு
இந்நிலையில் தான், சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி, லாலு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர். நிதிஷ் குமாரும், கிஷோர் ஒரு விளம்பர நிபுணர் என்றும் அரசியல் பற்றி பிகேவுக்கு ஏபிசிடி கூட தெரியாது என்றும் அவர் பா.ஜ.க.வுக்கு உதவ விரும்புகிறார் என்றும் தாக்கினார். இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகசிய மீட்டிங்
இந்நிலையில், நேற்று இரவு பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது சுமார் 2 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரான பவன் வர்மா இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அவரும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகேவை முதன்முதலில் நிதிஷுக்கு அறிமுகம் செய்ததும் இந்த பவன் வர்மா தான்.
என்ன பேசினார்கள்?
பிகே உடனான சந்திப்பு பற்றிப் பேசியுள்ள நிதிஷ் குமார், "நாங்கள் சந்தித்துக்கொண்டோம். நாங்கள் விசேஷமாக எதுவும் பேசவில்லை. சாதாரண உரையாடல் தான் எங்களுக்குள் நடந்தது. நாங்கள் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது?. நீண்ட காலமாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது. பிரசாந்த் கிஷோர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
2024 திட்டம்?
கடந்த இரண்டு ஆண்டுகளில், இருவரும் நான்கு முறை சந்தித்துள்ளனர். எனினும், இந்த முறை இவர்கள் சந்தித்தது 2024 தேர்தலை மையப்படுத்தி அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஓரணியில் திரட்டும் வேலையில் இறங்கியுள்ள நிதிஷ் குமார் 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என தகவல்கள் அடிபட்டு வரும் நிலையில், கருத்து மோதலில் ஈடுபட்ட இருவரும் திடீரென சந்தித்து ஆலோசித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.