ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. ஆளுநருக்கு எதிராக சீறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. போராட்டங்கள் அறிவிப்பு
பெரம்பலூர்: தமிழக அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட்டும் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது.
தமிழக ஆளுநருக்கு எதிராக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்து வருவதால், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாம.. வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?
அதிகரிக்கும் மோதல்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. குறிப்பாக, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட ஏராளமான முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மார்க்சிஸ்ட் கண்டனம்
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தமிழக அரசு நிறைவேற்றிய 60-க்கும் மேற்பட்ட மசோதாக்கள், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஆன்லைன் சூதாட்ட மசோதா..
இவ்வாறு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ஆளுநரின் இந்தச் செயல், மாநில அரசின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல், அதனால் நேரிடும் உயிர் பலிகளுக்கு ஆளுநர் உடன்படுகிறார்.
பெரிய அளவில் போராட்டம்
இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து விளக்கமும் அளித்துள்ளார். அதன் பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது எவ்வகையில் நியாயம்? இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் 25 பேர் உயிரிழந்த நிலையில் இதை தடை செய்ய தமிழக அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவரை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 29-ம் தேதி சென்னை ராஜ் பவன் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.