சத்தமின்றி நடந்த தொழிற்புரட்சி.. உலகின் டாப் காலணிகளை உற்பத்தி செய்யும் பெரம்பலூர்.. வந்தது பூங்கா!
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகம் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் முதலீடுகள் பெருகி வருகின்றன. மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக தென் மாவட்டங்களில், மேற்கு மாவட்டங்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே கிராக்ஸ் உள்ளிட்ட காலணிகளை தயாரிக்கும் விதமாக முக்கியமான தொழிற்சாலை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழிற் புரட்சி: இத்தொழிற்சாலையை அமைக்க 28.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள் அதன் பின்னர், மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னேற்றம்: காலணிகளைப் பொறுத்தவரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிக அளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளும் மிகப்பெரிய உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது.
இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், 23.8.2022 அன்று "தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022" தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது.
சிப்காட் நிறுவனம்: "அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி" என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்துள்ளது. இப்பூங்காவில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.இந்நிறுவனம், 2028-ஆம் ஆண்டிற்குள் 2,440 கோடி ரூபாய் முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னையில் அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. ஜனவரியில் மிகப்பெரிய அளவில் இந்த மாநாடு நடக்க உள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பிரம்மாண்ட மாநாடு நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வருடமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஐடி துறையில் சுணங்கி இருந்த தமிழ்நாடு வேகமாக பல்வேறு முதலீடுகளை பெற்று வருகின்றன. அதேபோல் தொழிற்துறையிலும் பல அதிரடி சாதனைகளை தமிழ்நாடு அரசு நிகழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications