ஜனநாயக விரோதம்.. புதுவையில் 3 நியமன எம்எல்ஏக்கள் உத்தரவுக்கு தடை விதிக்கணும்.. ஹைகோர்ட்டில் வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுவை சட்டமன்ற தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என் ஆர் காங்கிரஸ், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள்.. பாஜகவை சேர்ந்த மூன்று பேர் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு
3 நியமன எம்.எல்.ஏ.க்கள்
புதுச்சேரி முதல்வராக என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே கடந்த 10-ம் தேதி புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூன்று நியமன பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பா.ஜ.க உறுப்பினர்களின் அதிகரிப்பதாகவும், பா.ஜ.க குறுக்கு வழியில் புதுவையில் ஆட்சியை பிடிக்க முயல்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அவசரம் இல்லை
இந்த நிலையில் புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் உததரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்காத நிலையில் 3 நியமன நிர்வாகிகளை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.
அரசியல் சாசனத்துக்கு விரோதம்
பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது ஜனநாயக விரோதமானது. அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
தடை விதிக்கணும்
அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படவில்லை. என்வே 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் ஜெகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.