மொத்தக் குமுறலையும் ரோட்டில் கொட்டிய நாராயணசாமி.. பரபரக்கும் புதுச்சேரி
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையிலான லடாய் நாடறிந்தது. இன்று அது நடு ரோட்டுக்கு வந்து விட்டது.
கிரண் பேடி துணை நிலை ஆளுநராக வந்தது முதலே பஞ்சாயத்துதான். முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் பொழுது விடிந்து பொழுது போனால் ஏதாவது ஒரு சண்டை.
இருவருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதே தவிர கொஞசம் கூட குறைந்தபாடில்லை. இப்போது ஹெல்மெட் அணிவதிலும் இவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 200 ரூபாயும், மூன்றாவது முறை மூன்று மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் போலீசார் தீவிரமாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.
நாராயணசாமியின் உத்தரவு
ஆனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம் என்ற முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவுக்கு மாறாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிளுக்கு அழுத்தம் கொடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுத்தி, பொதுமக்களிடம் அபராதம் விதித்து வருவதற்கு எதிர்ப்பு வெடித்துள்ளது.
ரோட்டுக்கு வந்த மோதல்
இன்று நடு ரோட்டுக்கு வந்து விட்டது இந்த மோதல். முதலமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், கந்தசாமி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கருப்பு துண்டு அணிந்து சட்டப் பேரவையிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா
அப்போது ஆளுநர் மாளிகையின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை மட்டும காவல்துறைனர் ஆளுநர் மாளிகை செல்ல அனுமதித்தனர். பின்னர் ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தமாக தீர்வு காண
முதல் முறையாக ஆளுநருக்கு எதிராக மாநில முதல்வர் தர்ணாவில் குதித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருப்பதால் ஆளுநர் மாளிகை உள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளுக்கு மொத்தமாக தீர்வு காணும் வகையிலேயே நாராயணசாமி போராட்டத்தில் குதித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கிரண் பேடியும் இறங்கிப் போகக் கூடிய ஆள் இல்லை என்பதால் இந்தப் போராட்டம் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை.