15 நாளில் ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்.. மாணவியின் தாய் புகார்.. சிக்கிய ரவுடி பேபி சூர்யா கேங்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய 15 நாட்களில் ஆபாச வீடியோ அனுப்பியும், நிர்வாணமாக வீடியோவில் வருமாறும் கூறி மிரட்டியதாக பிரபல யூடியூபரின் மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த சிறுமிக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரிடையேயும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது மூலமாக தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் பழகிய 15 நாட்களிலேயே அந்த நபர் சிறுமியிடம் தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். பின்னர், ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அனுப்பியுள்ளார். சிறுமியையும் நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த சிறுமி இச்சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இன்ஸ்டாகிராம் நபர் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொழில்நுட்ப உதவியுடன் வீடியோக்களை அனுப்பிய நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா, சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பது தெரியவந்தது.
ரவுடி பேபி திருச்சி சூர்யா அஷ்ரப் அலியின் சித்தி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில் மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, அஷ்ரப் அலியின்
செல்போனை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
செல்போனில் இதேபோல பல்வேறு பெண்களுக்கு அஷ்ரப் அலி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அஷ்ரப் அலியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அஷ்ரப்பை அடைத்தனர்.
இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications