மாணவர்கள் மரணத்தை நிறுத்துங்க.. இல்லாவிட்டால் மாநில அரசுக்குத்தான் அவமானம்.. அமீர் தாக்கு
புதுவை: தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ந்து நடைபெறுவது மாநில அரசுக்கு அவமானம் என இயக்குநர் அமீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர், சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுவை சென்ற அமீர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது மாநில அரசுக்கு அவமானம். திமுக, அதிமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே நிலைதான் தொடர்கிறது.

முந்தைய ஆட்சி
எனவே முந்தைய ஆட்சி, தற்போதைய ஆட்சி என பிரித்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பள்ளி மாணவிகளின் தொடர் மரணங்களுக்குத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசுக்கு மிகப் பெரிய தலைக்குனிவாக மாறிவிடும். பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை காட்டிலும் நியாயம் கேட்டு போராடுவோர் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வருத்தம்
இது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்காகத்தான் தமிழக அரசுக்கும் போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமீர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
அண்மைக்காலமாக தமிழகத்தில் நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அது போல் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.

ஒரே மாதத்தில்
ஒரே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் மரணம், திருவள்ளூரில் அரசு நிதியுதவி பெறும் மாணவி மரணம், விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி,விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை என நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. மாணவர்கள் மன உளைச்சல் ஏற்பட்டால் பெற்றோரிடமோ காவல்துறையிடமோ முறையிட வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது என்பது அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications