இதுதான் மனிதம்.. ஊர் போக முடியாமல் தவித்தவரை.. சொந்தக் காசில் அனுப்பி வைத்த அதிகாரிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை பெற வந்தவர் ஊர் செல்ல முடியாமல் பரிதவித்த நிலையில், தனது சொந்த செலவில் அரசு அதிகாரிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டம் பச்சைமலை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி காந்தி. அவர்களுக்கு 5 வயதில் மோனிஷ்குமார் என்ற மகன் உள்ளார். மோனிஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தான். இதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவ்வப்போது தந்தையுடன் வந்து சிறுவன் சிகிச்சை பெற்று வந்தான்.
கடந்த 28 ஆம் தேதி சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே பெற்றோர் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறுவன் மோனிஷ்குமாரை தந்தை ரவீந்திரனுடன் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

ஜிப்மரில் சிகிச்சை
பின்னர் ஜிப்மர் மருத்தவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மருந்து கொடுத்து இம்மாதம் 19 ஆம் தேதி மீண்டும் சிகிச்சைக்கு வருமாறு கூறி சிறுவன் மோனிஷ்குமாரை நேற்று டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதாலும், கையில் பணம் இல்லாததாலும் சேலத்துக்கு எப்படி செல்வது எனத்தெரியாமல் தவித்த ரவீந்திரன் செய்வது அறியாது கையில் சிறுவனை தூக்கி கொண்டு புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் வந்து நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தார்.

ஊர் திரும்ப முடியவில்லை
அப்போது அங்கு வந்த காவல்துறை சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் ஊர்காவல்படை வீரர் மணிகண்டன் அவர்களை கண்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். இதனை அறிந்த துணை வட்டாட்சியர் செந்தில்குமார் தனது சொந்த செலவில் காரில் ரவீந்திரன், மோனிஷ்குமாரை சேலத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

காசு கொடுத்து உதவிய அதிகாரிகள்
மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை மாவட்ட ஆட்சியர், இரண்டு வட்டாட்சியர்கள் தங்களால் முடிந்த பண உதவி செய்தனர். மொத்தமாக ரூ.17 ஆயிரம் பணம் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவு ஆகியவற்றை கொடுத்து, பாதுகாப்புக்கு வாகனத்தில் ஒருவரை அமர்த்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து குழந்தையின் தந்தை ரவீந்திரன் கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தேன். மீண்டும் ஊர்செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

சொந்த வாகனத்தில் அனுப்பினோம்
ஆனால், நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எனக்கு இங்குள்ள மனிதர்கள் இப்படி உதவி செய்வார்கள் என்று, என்னால் அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை என்றார். துணை வட்டாட்சியர் செந்தில்குமார் கூறுகையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை வைத்து ஒரு தந்தை படும் துன்பத்தை பார்த்தவுடன் கண்கலங்கிவிட்டேன். உடனே, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடனும், என்னுடன் பணியாற்றும் துணை மாவட்ட ஆட்சியர், துணை வட்டாட்சியர்கள் உதவியுடனும் தந்தை, மகனைப் பத்திரமாக சொந்த வாகனத்தில் அனுப்பி வைத்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications