சிஏஏ சட்டத்தை எதிர்த்து உங்களால் எதுவும் செய்ய முடியாது.. நாராயணசாமிக்கு பேடி லெட்டர்
புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொருந்தும் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் மூலம் தகவல்.
புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 12 ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சியின் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவை செயலாளரிடம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கூடாது என வலியுறுத்தி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்த பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரும், வருகிற 12 ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தீராமானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவருவதற்கும், விவாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.
கிரண்பேடியிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் முடங்கியுள்ளது. மக்கள் மத்தியில் இதனை திசை திருப்ப நாராயணசாமி இது போன்று செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் முதலமைச்சர் நாராயணசாமி அமதியான புதுச்சேரியை கலவர பூமியாக்கவும், வாக்கு வங்கி அரசியலாக்க இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தார். இந்த தீராமனத்தை பேரவையில் கொண்டு வரும்போது பாஜக இதனை கடுமையாக எதிர்க்கும் என்றும், இதுதொடர்பாக குடியரசு தலைவரிடம் புகார் தெரிப்போம் என தெரிவித்தார்.
என்னை தாண்டி போய்டுவீங்களா.. பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்!
பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், புதுச்சேரியில் வரும் 12 ந்தேதி கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொருந்தும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான விவகாரங்கள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதுவரை குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்துவந்த கிரண்பேடி, தற்போது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இதனால் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் - ஆளுநர் கிரண்பேடிக்கும் மீண்டும் மோதல் தொடங்க உள்ளது.