தலையில் ஹெல்மெட் எங்கே.. நடு ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி அதிரடி காட்டிய கிரண் பேடி
Recommended Video
புதுச்சேரி: சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிய சொல்லி எச்சரித்து அனுப்பினார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ஆளுநரின் இந்த அதிரடி செயலால் புதுச்சேரியே பரபரப்பாக காணப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பர்வகளிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் விவகாரத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை பொறுத்தவரையில், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை முதலில் போலீசார் அழைத்து அறிவுறைகளை கூறி, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பின்னர் படிப்படியாக அபராதம் விதிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டுமென காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியோ, இன்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்தி, ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதமும் விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சொல்வதை நடைமுறைப்படுத்துவதா, அல்லது முதலமைச்சர் நாராயணசாமி சொல்வதை நடைமுறைப்படுத்துவதா என புதுச்சேரி போலீசார் உச்சகட்ட குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஜெயா நகர் பகுதியில் திடீரென தானே களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரை தடுத்தி நிறுத்திய கிரண்பேடி, ஹெல்மெட் எங்கே? ஹெல்மெட் போடாமல் ஏன் வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என சராமாரியான கேள்விகளை எழுப்பி, இனி ஹெல்மெட் அணிந்துதான் வாகனத்தை இயக்க வேண்டுமென எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
அதேபோன்று இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் பயணம் செய்தவர்களையும், ஆட்டோவில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிவந்த ஆட்டோக்களையும் தடுத்தி நிறுத்திய கிரண்பேடி, சாலை விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரித்து அனுப்பினார்.
ஹெல்மெட் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே நேரடியாக வீதியில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருவதால், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.