அதிகரிக்கும் கொரோனா: புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை விடுமுறை!
புதுவை: கொரோனா அதிகரித்து வருவதால் புதுவையில் மார்ச் 22 முதல் மறு உத்தரவு வரும் வரை 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுவை கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுவையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தன. தமிழகத்தைபோல் புதுவையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து புதுவையில் மார்ச் 22 முதல் மே 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து நேற்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் விடுமுறை அளித்து புதுவை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
9,10,11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 22-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
9,10,11-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. 12-ம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று கல்வித்துறை கூறியுள்ளது.