குளிர்பானத்தில் விஷம்! காரைக்கால் மாணவனின் சாவுக்கு காரணம் என்ன?அதிரடி உத்தரவிட்ட ரங்கசாமி! பின்னணி?
காரைக்கால் : காரைக்காலில் தன் மகளை விட நன்றாக படித்ததால் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகாரில் , காரைக்காலில் சம்பளம் பெற்று புதுச்சேரியில் பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த நேரு நகர் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் மாலதி தம்பதியரின் 2வது மகன் பால மணிகண்டன் அதே பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பள்ளியில் பயிலும் சக மாணவியின் தாயார் விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து குடித்ததால் கடந்த 03ம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்காலில் அதிர்ச்சி
மாணவன் மரணத்திற்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததும், காவல்துறை விசாரணையை முறையாக கையில் எடுக்காதது தான் காரணம் என மாணவன் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அமைதி பேரணி
இந்த நிலையில் இன்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாணவன் பால மணிகண்டனின் பெற்றோர்,உறவினர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் ஆட்சியரை சந்தித்து பால மணிகண்டனின் பெற்றோர் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது ஆட்சியர் பால மணிகண்டனுக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

எச்சரிக்கை
மேலும் காரைக்காலில் ஊதியம் பெற்று புதுச்சேரியில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் மீண்டும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில், காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் சஸ்பெண்ட்
மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது. மருத்துவ குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த உத்தரவினை முதல்வர் ரங்கசாமி பிறப்பித்துள்ளார். மேலும் இதுகுறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications