போலீசை ஏவி எங்களை அப்புறப்படுத்த பார்க்கிறார்.. கிரண்பேடி மீது நாராயணசாமி பகீர் புகார்!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எங்களை போலீசை வைத்து அப்புறப்படுத்த பார்க்கிறார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எங்களை போலீசை வைத்து அப்புறப்படுத்த பார்க்கிறார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வரின் தர்ணா தொடர்ந்து 6வது நாளாக ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்து வருகிறது. புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிப்பது கிடையாது. மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு எதிராக கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதை அடுத்து ஒரு வாரம் முன் அவர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் குதித்தார். நேற்று நாராயணசாமியும், கிரண்பேடியும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதையடுத்து நேற்று நாராயணசாமியின் தர்ணா உச்சம் அடைந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் நாராயணசாமியின் தர்ணா நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். புதுச்சேரி மக்களுக்கு எதிராக அவர் நடந்து கொள்கிறார்.
எங்களின் கோரிக்கைக்கு அவர் செவிமடுக்கவில்லை. எங்களை போலீசை வைத்து அப்புறப்படுத்த பார்க்கிறார். போராட்டம் செய்பவர்களிடம் பேசாமல் அப்புறப்படுத்த முயல்கிறார். போலீஸ் எப்போது வேண்டுமானாலும் எங்களை அப்புறப்படுத்த முயலும்.
எங்கள் போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.