புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை... முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
6 மாதங்கள் காலக்கெடு
புதுச்சேரியில் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அத்துடன் கேடு அதிகளவில் ஏற்படுவதால் புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளோம் என்றும், இதையொட்டி தொழிற்சாலைகளுக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.
கடும் நடவடிக்கை
மேலும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று ஏற்பாடுகள், ரசாயன கலப்பு இல்லாமல் மக்களுக்கு தேவையானவை செய்யப்படும். 6 மாதங்களுக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்
முதலமைச்சர் அறிவிப்பு
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தர்ணா
முன்னதாக, தமிழகத்தை போலவே புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், பாஜக மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.யுமான சுவாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் தடையானது சுற்றுசூழலை பாதுகாக்கும், மழை நீரை சேகரித்து வைக்கும், எனவே புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.