ராஜினாமா செய்ய மாட்டோம்... சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - நாராயணசாமி திட்டவட்டம்
புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி: இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி மாநில அமைச்சரவை நடைபெறும் என்றும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நாங்கள் சட்டசபையில் நிரூபிப்போம் என்றும் கூறியுள்ளார் நாராயணசாமி.
புதுச்சேரி அரசியல் களம் படுபரபரப்பை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமசிவாயம், எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோரைத் தொடர்ந்து இன்று எம்எல்ஏ ஜான்குமாரும் பதவி விலகி உள்ளார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 மாநில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவே, நாராயணசாமி அரசுக்கு சிக்கல் எழுந்தது. காரணம் பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுக்கு தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி முதல்வராக நீடிக்க தகுதியற்றவர் நாராயணசாமி என்று எதிர்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர் என். ரங்கசாமி வலியுறுத்தினார். அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சட்டசபையை கூட்டி முதல்வர் நாராயணசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ஒருபோதும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறினார். இந்திய அரசியல் சாசன சட்டப்படி செயல்படுவோம் என்று கூறிய நாராயணசாமி, சட்டசபையில் எங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று தெரிவித்தார். ராஜினாமா செய்யச் சொல்லி எதிர்கட்சியினர் கேட்பதில் தவறில்லை. அதற்கெல்லாம் நாங்கள் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 இடங்களில் திமுக காங்கிரஸ் கட்சியின் பலம் 19 ஆக இருந்தது. பாகூர் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்ததை அடுத்து ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சையின்(மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
புதுச்சேரி: நாராயணசாமியாலும் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி நடத்த முடியலையே- ரெங்கசாமி மட்டுமே சாதித்தவர்!
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது.
நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி அரசியல் சதுரங்கத்தில் வெல்லப்போவது ஆளும்கட்சியா? எதிர்கட்சிகளா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.