என்ன மனுஷன்யா.. நன்றி சிஎம் சார்! விஜய் பேசப் பேச! செல்போனில் லைவில் பார்த்து ரசித்த ரங்கசாமி!
புதுச்சேரி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பேச்சின் ஆரம்பத்தில் இருந்து ஒன்றிய அரசை விமர்சித்த விஜய், தொடர்ந்து திமுகவையும் நம்ப வேண்டாம் என பேசினார். தனது பேச்சின் இடையில் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கிய புதுச்சேரி அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தார் விஜய். ஒரு வார்த்தை கூட என்ஆர் காங்கிரஸ் குறித்தோ, ரங்கசாமி குறித்து விஜய் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயின் பேச்சை நேரலையில் தனது செல்போனில் கண்டு ரசித்தார் புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி.
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் விஜயின் பேச்சு இருந்தது. பேச்சின் ஆரம்பத்தில் ஒன்றிய அரசை விமர்சித்த விஜய் இடையே திமுகவையும் விமர்சித்தார்.
திமுகவை நம்ப வேண்டாம் என புதுச்சேரி மக்களை கேட்டுக் கொண்ட அவர், புதுச்சேரியை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குறிப்பிட்டார். மீனவர் பிரச்சனை, ரயில்வே திட்டங்கள் என ஒன்றிய அரசை குறி வைத்து தான் விஜயின் பேச்சு இருந்தது.

புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்
ஆனால் ஆளுங்கட்சியான என் ஆர் காங்கிரஸ் குறித்தோ முதலமைச்சர் ரங்கசாமி குறித்த விஜய் பேசவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய்," ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என தனித்தனியாக பார்ப்பார்கள். ஆனால், நமக்கு அப்படி கிடையாது. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான்; ஒரே சொந்தம்தான்! தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா ஏன் உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் நம்ம வகையறா எல்லாரும் நம்ம உயிர் தான் நம்ம உறவு தான். 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார்.
விஜய் பேச்சு
எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டிற்கு அலர்ட் செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா? புதுச்சேரி அரச பத்தி சொல்லியே ஆகணும். தமிழ்நாட்டுல இருக்குற திமுக அரசு மாதிரி கிடையவே கிடையாது. வேற ஒரு கட்சி கூட்டத்துக்கு பாரபட்சமே காட்டாம, பாதுகாப்பு கொடுத்துருக்காங்க. அப்படிப்பட்ட இந்த அரசுக்கும் CM சாருக்கும் மனப்பூர்வ நன்றி. இத பாத்தாவது அந்த திமுக அரசு கத்துக்கிட்டா நல்லா இருக்கும். புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்" என விஜய் பேசினார்.
விஜய் ரங்கசாமி நட்பு
விஜயின் பேச்சு ஆளும் கட்சியை பாராட்டுவது போலவே இருந்தது. வழக்கமாக தமிழகத்தில் ஆளும் கட்சியை குறி வைத்து பேசும் விஜய் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க போகிறேன் என சொல்லிவிட்டு ஆளும் கட்சியை விமர்சிக்காமல் இருப்பது வருங்கால கூட்டணிக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. மேலும் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால் ரங்கசாமிக்கு நல்ல நெருக்கம் அதனால்தான் விஜயின் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் குறித்து அடிக்கடி ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
ரங்கசாமி லைவ் ரியாக்ஷன்
பல்வேறு நெருக்கடிகள் இருந்தபோதிலும் விஜயின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியதோடு பாதுகாப்பையும் வழங்கிய ரங்கசாமிக்கு விஜய் நேரடியாகவே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயின் பேச்சை நேரலையில் கண்டு ரசித்திருக்கிறார் ரங்கசாமி. தனது ஆதரவாளர்களுடன் பேக்கரி ஒன்றுக்கு சென்ற அவர் டீ அருந்தியப்படியே விஜயின் பேச்சை நேரலையில் பார்த்து ரசித்தார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications