2 வேக்சின் செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு.. எங்க தெரியுமா?
புதுச்சேரி: உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் புகுந்து விட்டது. இந்தியாவில் ஓமிக்ரான் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் புதுவை மாநிலத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் விதிக்க உத்தரவு
அதாவது புதுச்சேரியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். .மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையுடன் பிற அவசிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்
மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராண வாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் புதுச்சேரியில் இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று அந்த மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இரண்டு டோஸ்கள் செலுத்தி இருக்க வேண்டும்
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலகம் உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் செலுத்தி கொண்டார்களா என்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். அப்படி இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும்.

ஜனவரி 7ம் தேதிக்குள்...
அதேபோல இரண்டு தடுப்பூசி பூர்த்தி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும். அனைத்து தரப்பு அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் 100% தடுப்பூசி என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications