மத்திய அமைச்சர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு! புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சர்ச்சை
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்ட அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் புறக்கணிக்கப்படுது உள்ளிட்டவை வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
அதேபோல் 73வது சுதந்திர தினத்தன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆணவமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, அப்படி எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று பதிலளித்தது மீண்டும் சர்ச்சையை அதிகரித்தது.
இந்தநிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார். அப்போது ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளியையும் திறந்து வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், செல்வகணபதி எம்பி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழா தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பாடவில்லை என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதியிலேயே முதலமைச்சர் ரங்கசாமி வெளியேறினார். தொடர்ந்து விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வலியுறுத்திய பின், விழாவின் இடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர், மாநில துணைநிலை ஆளுநர், மாநில முதலமைச்சர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு, நோயாளிகள் அலைக்கழிப்பு என ஜிப்மர் நிர்வாகம் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு. இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இனி வரும் காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அனைத்து மத்திய அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.