கொரோனா அச்சம்.. ஓட்டல்கள் காலி.. சுற்றுலா தலங்களில் மக்கள் இல்லை.. புதுச்சேரி நிலவரம்
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சத்தால் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்றி சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கோரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா அச்சத்தால் புதுச்சேரியில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கடற்கரை, படகு இல்லம், ஆரோவில், ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
புதுச்சேரியை பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் வருகைதான் நகரத்தை சிறப்பாக வைத்திருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தே புதுச்சேரியை சுற்றிப்பார்த்தனர்.