பெண்ணின் காலில் விழுந்த நிர்மலா சீதாராமன்.. மேடையிலேயே நடந்த சம்பவம்.. யார் இந்த சபீதா?
புதுச்சேரி: புதுச்சேரியில் இலக்கிய திருவிழா 2024 என்ற பெயரில் விழா நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது மேடை ஏறி பூங்கொத்து கொடுத்த பெண்ணின் காலில் விழுந்து நிர்மலா சீதாராமன் ஆசீர்வாதம் வாங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பெண் யார்? நிர்மலா சீதாராமன் ஏன் அவரது காலில் விழுந்தார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்று செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போது அவர் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்கிறார். இந்த சமயத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல், கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தமிழகத்தில் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதுபற்றி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் புதுச்சேரியில் "பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024" என்பது நடந்தது. இந்த விழா கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 3 நாள் விழாவின் இறுதி நாளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியில் சபீதா என்பவர் பங்கேற்று இருந்தார். இவர் திடீரென்று மேடையில் ஏறி நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பூங்கொத்தை வாங்கிய நிர்மலா சீதாராமன் அவரிடம் சில வினாடிகள் பேசிய பின் திடீரென்று அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் சபீதா யார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது தான் சபீதா, நிர்மலா சீதாராமனின் ஆசிரியை என்பது தெரியவந்தது.

அதாவது நிர்மலா சீதாராமன் கடந்த 1974-76ம் ஆண்டில் திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படித்தார். இந்த சமயத்தில் நிர்மலா சீதாராமனின் ஆசிரியையாக சபீதா இருந்தார். நிர்மலா சீதாராமனுக்கு அவர் சமூக அறிவியல், வரலாறு, புவியில் பாடங்களை சொல்லி கொடுத்துள்ளார். தற்போது சபீதா பள்ளி ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் தான் நிர்மலா சீதாராமன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தெரியவந்தது.
இதுபற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை சபீதா கூறுகையில், ‛‛ திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில் நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். அவருக்கு 10, 11ம் வகுப்பில் பாடம் எடுது்தேன். கட்டுரை மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட பல போட்டிகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார். பள்ளியில் ஒருமுறை ‛மிசா' பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் மட்டுமே பதிலளித்தார். இப்படி பொது அறிவியல் சிறந்து விளங்கியவர் நிர்மலா சீதாரமான். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications