தினமும் பிரார்த்திக்கிறேன்,3ஆம் அலை ஏற்படக்கூடாது.. கொரோனாவுக்கு சிலைகூட வைக்கிறேன்.. ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: கொரோனா 3ஆம் அலை ஏற்படக் கூடாது எனத் தினமும் கடவுளைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அடுத்து கொரோனா அலை ஏற்படாமல் இருந்தால், கொரோனாவுக்கு சிலைகூட வைத்து விடுகிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், புதுச்சேரியுடன் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது.

மருத்துவர்கள் பங்களிப்பு
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு எனது பாராட்டுகள். கொரோனா என்பது நெருக்கடியான ஒரு காலகட்டம். இதுபோன்ற சமயங்களில் பணியாற்றுவது எளிதான காரியம் இல்லை. மருத்துவர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாகவே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா 2ஆம் அலை காரணமாக மற்ற மாநிலங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் என இரண்டையும் பாதுகாத்துள்ளோம். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

அனைவருக்கும் வேக்சின்
புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கொரோனா வேக்சினை செலுத்த வேண்டும். இதற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி கண்டிப்பாகத் தேவை. கொரோனா பரவலை மருத்துவர்களால் தான் கட்டுப்படுத்த முடிகிறது. அதேபோல நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிலை வைக்கிறேன்
கொரோனா 3ஆம் அலை கூட விரைவில் ஏற்படலாம் எனக் கூறுகிறார்கள். இனி எந்த அலையும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்காக நாம் தினமும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அடுத்து கொரோனா அலை ஏற்படாமல் இருந்தால், கொரோனாவுக்கு நான் சிலைகூட வைத்து விடுகிறேன்" என்று அவர் பேசினார்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பும், கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் முன் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications