கடனுக்கு தையல் மிஷன்.. சொந்தக் காசில் துணி வாங்கி.. மாஸ்க் தயாரித்து கொடுக்கும் சூப்பர் பெண்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், துப்புரவு பணியாளர், காவலர்கள், சுகாதார பணியாளர், ஏழை எளியவர்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த செலவில் முகக்கவசம் தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்.
வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பலரும் பயன்படுத்த வேண்டிய பொருளாக முகக்கவசம் மாறியுள்ள நிலையில், அதன் தேவையைக் கருத்தில்கொண்டு முக கவசத்தின் விலையை உற்பத்தியாளர்கள் கடுமையாக உயர்த்தியுள்ளனர். மேலும் முக கவசங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த பணத்தில் முகக்கவசம் தயாரித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கூலி வேலைத் தொழிலாளர்கள்
தினமும் கூலி வேலைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்ற வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்ந்து வரும் இந்த பெண்கள், மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், துணியில் முகக்கவசம் செய்து இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக செவிலியர் மாணவி, மாற்றுத்திறனாளி பெண் உட்பட 11 பேர் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் திட்டத்தைக் கையில் எடுத்தனர். தங்களுடைய சொந்த செலவில் காட்டன் துணி வாங்கினர்.
வாடகைக்கு தையல் மெஷின்
பின்னர் வீடுகளில் தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் இருந்து தையல் இயந்திரத்தை கேட்டு பெற்று ஒரே இடத்தில் வைத்து முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் தயாரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட முகக்கவசத்தை துப்புரவு பணியாளர், காவலர், சுகாதாரக் கடைநிலை ஊழியர், சாலையோரம் வசிப்போர், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இதுவரை 1,500 முகக்கவசங்களை இவர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர். இவர்களின் சேவையை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
இலவச மாஸ்க்
இதுகுறித்து முகக்கவசம் தயாரிக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ரத்னா என்ற பெண் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் உள்ளது. வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை நாங்களும் உணர்ந்துள்ளோம். எனவே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டபோது, எங்கள் பகுதி பெண்கள் சில வழிமுறைகளை தெரிவித்தனர்.
இலவச கபசுர குடிநீர்
முதலில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினோம். அதன்பிறகு புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் இருந்து கிருமி நாசினி வாங்கி வந்து எங்கள் பகுதி முழுவதும் தெளித்தோம். இச்சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம், மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் அதன் அவசியத்தை உணர்ந்த நாங்கள், முகக்கவசம் தயாரித்து வழங்கி வருகின்றோம். இது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் வரை முக கவசங்களை இலவசமாக தைத்து தர முடிவு செய்துள்ளோம் என்றார் ரத்னா.