இந்த பாஜகவிற்கு இதுதான் வேலை.. முதல்வர் ஆக்ஷன் பக்கா.. துரை வைகோ அதிரடி
புதுக்கோட்டை : கோவையில் நடந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறார், அந்த சம்பவத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தான் என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை செய்தார் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் பந்த் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக! தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம்!
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதை வைத்து பாஜக அரசியல் செய்யக் கூடாது என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை. வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,"தமிழகத்தில் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் குற்ற சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் ஆனால் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்களில் அழுத்தங்கள் காரணமாக தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது
துரை வைகோ
இந்த ஆட்சியிலும் பிரச்சனைகள் நடந்து தான் வருகிறது ஆனால் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் காவல்துறையாலோ அரசாலோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது பொதுமக்கள் கையில் தான் உள்ளது. கோவை சம்பவத்தில் சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்திற்குள்ளேயே ஐந்து நபர்கள் கைது செய்யப்படுகின்றனர், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாஜக மலிவான அரசியல்
காவல்துறை துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் முதல்வர் தகுந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தொடர்பு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் தான் தமிழக முதல்வர் விசாரணையை என் ஐ ஏ விற்கு மாற்றி உள்ளார். தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோவையில் 31 ஆம் தேதி பந்த் போராட்டம் நடைபெறலாம். ஆனால் தமிழக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக எடுத்து வருகிற நிலையில் என் ஐ ஏ விசாரணைக்கு செய்து வரும் நிலையில் பாஜக சார்பில் ஒரு 31ஆம் தேதி நடைபெறும் பந்த் தேவையற்றது. இதை வைத்து பாஜக மலிவான அரசியலை செய்து வருகிறது.
ஹிந்தி தெரியாது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்தி தெரியாது என்று கூறியதாவது மீனவர்கள் இந்திய கடற்படையால் உத்திரவதை செய்யப்பட்டு துப்பாக்கி சூடு நடத்திய சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. ஹிந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை ஹிந்தி படித்தால் தான் அரசு வேலை கிடைக்கும் என்று ஹிந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் என்று வேறு வேறு கொள்கை கோட்பாடுகள் இருக்கும். ஆனால் தேர்தல் கூட்டணி என்பது தற்போது மதம் மற்றும் மொழியை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை எதிர்த்து அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து உள்ளது. " என்றார்.