ஐயப்ப மாலை போட்டுட்டு.. சார் செய்த வேலையை பாருங்க.. புதுக்கோட்டை ஆன்திவேயில் "சாமி"யை அள்ளிய போலீஸ்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் அப்பணத்தை சம்பாதிக்க கஞ்சா கடத்திய தீயணைப்பு துறை வீரர் ஒருவர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஹரிமுருகன். இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தீயணைப்புத்துறையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு சேர்ந்தபின்னர் ஆன்லைனில் சூதாட்டத்தை தொடர்ந்திருக்கிறார். தொடக்கத்தில் கொஞ்சம் பணம் சம்பாதித்திருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை ஈடுகட்ட நண்பர்களிடத்தில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் உரிய நேரத்தில் கொடுக்கப்படாததால் நண்பர்களுக்கும் இவருக்கும் இடையே பிரச்னை எழுந்திருக்கிறது. அதன் பின்னர் உறவினர்களிடத்திலிருந்து கடன் வாங்கி நண்பர்களின் கடனை அடைத்திருக்கிறார். பின்னர் உறவினர்களிடையே சர்ச்சை எழுந்திருக்கிறது. பணத்தை தேடி தொடர்ந்து அலைந்திருக்கிறார். அப்போதுதான் சிலர் இவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கின்றனர்.

கஞ்சா கடத்தல்
அதன்படி இவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். ஒருபுறம் காவல்துறையினர் கஞ்சாவை ஒழிக்க முயன்றுக்கொண்டிருக்கையில் இவர்களில் ஒருவரே கஞ்சா கடத்தலில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் நல்ல வருமானம் வந்ததால் இவர் இதனை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். இது இப்படியே தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினமான வெள்ளிக்கிழமையன்று காரில் மதுரையிலிருந்து புதுக்கோட்டைக்கு ஹரிமுருகன் கஞ்சா கடத்தியுள்ளார். ஆனால், இந்த தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட தொடங்கினர்.

சோதனை
இவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை கூட விடாமல் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான் ஹரிமுருகன் 'வழக்கறிஞர்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் புதுக்கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். காரை நிறுத்தி சோதனை செய்த காவலர்கள் முதலில் ஹரிமுருகனை சந்தேகப்படவில்லை. ஏனெனில் இவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்திருக்கிறார். இருப்பினும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது டிக்கியில் சிறிய பார்சல் இருந்திருக்கிறது. அதனை பிரித்து பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பார்சலில் கஞ்சா இருந்திருக்கிறது.

தீயணைப்பு படை வீரர்
இதனையடுத்து உஷாரான ஹரிமுருகன் அங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் இவரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் கார் முழுவதும் சோதனையிடப்பட்டபோது ஒரு போலீஸ் ஐடி கார்டு கிடைத்திருக்கிறது. அப்போது விசாரித்தபோதுதான் இவர் விருநகர் மாவட்டம் காரியாப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரிடம் விசாரணை தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன. அதாவது, இவரைப் போலவே பல பேர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கேங்க்
புதுக்கோட்டைக்கு இவர் வருவதற்கு முன்னரே மற்றொரு காரில் வேறு ஒருவர் கஞ்சாவை கடத்தி வந்திருக்கிறார். இந்த கார் குறித்த தகவல்களை பெற்று அதனை இதர காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளார் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன். இதனையடுத்து சம்பந்தப்பட்ட காரை தேடும் பணியில் காவல்துறையினர் களம் இறங்கியுள்ளனர். ஆனால் கார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் சனிக்கிழமை பேராவூரணி சாலையில் காரை நிறுத்திவிட்டு இரண்டு பேர் இறங்கி ஓடுவதை பொதுமக்கள் சிலர் பார்த்திருக்கின்றனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கையில் அவர்கள் காரை கைப்பற்றி உள்ளே சோதனை செய்து பார்த்திருக்கிறார்.

கைது
காரினுள் சுமார் 212 கி.கி கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டி வந்தவர்களை தேடியுள்ளனர். அறந்தாங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் பதுங்கியிருந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இவர்களை பிடித்து விசாரணை செய்ததில் இவர்கள்தான் கஞ்சாவை கடத்தி போலீசுக்கு பயந்து காரை பாதியிலேயே விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரு கேங்காக இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து தீயணைப்பு வீரர் ஒருவரே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருப்பது புதுக்கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications