ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? - அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்!
புதுக்கோட்டை : கோவை சிறைச்சாலையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டதற்கு சொந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியின்போது, ஆயுதப்படை காவலர் காளிமுத்து என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு போராடிய காளிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆயுதப்படை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுதப்படை காவலர்
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், அரசுப் பொருட்காட்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் காவல் துறையினரின் சாதனைகள் மற்றுத் காவல் தறையில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல்துறை கண்காட்சி அரங்கில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

தற்கொலை முயற்சி
நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, காவலர் காளிமுத்து வயிற்றுப்பகுதியில் சுப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் அதிர்ச்சியடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிதாபமாக பலி
இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆயுதப்படை காவலர் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் காளிமுத்து. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி காரணம்?
சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துப்பாக்கி எப்படி சுடப்பட்டது என்பது குறித்து காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில் ஆயுதப்படை காவலர் காளிமுத்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரகுபதி விளக்கம்
இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "கோவையில் காவலர் தற்கொலை செய்து கொண்டதற்கு சொந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம். தமிழக சிறைச்சாலைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை கிடையாது. அரசு சார்பில் பணிச்சுமையோ, மனச்சுமையோ கொடுக்கப்படுவது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications