விபத்தில் சிக்கி துடித்த பண்ட்.. காப்பாற்றாமல்.. காரிலிருந்த பொருட்களை திருட முயன்றனரா? உண்மை என்ன?
சண்டிகர்: இன்று காலை கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றாமல் சிலர் அவரின் பொருட்களை திருட முயன்றதாக செய்திகள் வந்தன. ஆனால் போலீசார் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.
உத்தரகாண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வேகமாக வந்த கார் சாலை தடுப்பில் படார் என்று மோதி உள்ளது. கார் மோதிய வேகத்தில் உடனே எஞ்சின் தீ பிடிக்க தொடங்கி உள்ளது. உத்தரகாண்டில் ரூர்கி என்ற பகுதிக்கு அருகே இந்த கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இன்று அதிகாலை விபத்து ஏற்பட்ட நிலையில் டேராடூன் மருத்துவமனையில் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்று சைரஸ் மிஸ்திரி.. இன்று ரிஷப் பண்ட்..! ரொம்பவே ஆபத்தானதாக மாறும் இந்திய சாலைகள்! என்ன பிரச்சினை
சுயநினைவு
இந்த நிலையில் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் நல்ல சுயநினைவுடன் இருந்துள்ளார். ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முதலில் சாக்சம் என்ற மருத்துவமனையில் முதலுதவி பெற்று அதன்பின் டெஹ்ராடூனில் இருக்கும் மேக்ஸ் ஹாஸ்ப்பிட்டலில் பண்ட் சேர்க்கப்பட்டார். முதலுதவி பெற சாக்சம் மருத்துவமனைக்கு வரும் போதே பண்ட் சுயநினைவுடன்தான் இருந்துள்ளார். அங்கு இவருக்கு தலையில் கட்டு போடப்பட்டு உள்ளது. காலிலும் வலி இருப்பதால் கட்டு போடப்பட்டு இருக்கிறது.
எங்கெல்லாம் காயம்
இது தொடர்பாக இவருக்கு முதலில் சிகிச்சை வழங்கிய மருத்துவர் சுஷில் அளித்துள்ள பேட்டியில், அவர் மருத்துவமனைக்கு வந்த போது முகத்தில் ரத்தம் வழிந்தது. காயம் காரணமாக ரத்தம் வந்தது. ஆனால் அவர் முழு சுயநினைவோடுதான் இருந்தார். அவரிடம் நானாக பேசினேன். காயத்திற்கு கட்டுபோட்ட பின் நன்றாக பேசினார்.என்னுடைய அம்மாவை பார்க்க சென்று கொண்டு இருந்தேன். புத்தாண்டிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக சென்று கொண்டு இருந்தேன் என்று கூறினார், என கூறியுள்ளார். பண்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் தொடர்பாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பண்டிற்கு தலையில் இரண்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது காலில் சதை கிழிந்துள்ளது. அதேபோல் மணிக்கட்டு, கெண்டை கால், கணுக்காலில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோதனை
தற்போது இவர் முழு கண்காணிப்பில் இருக்கிறார். இவர் ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இவரின் உடல்நிலை தேறி உள்ளது. இவருக்கு மேல் சிகிச்சை அளிக்க டெல்லிக்கு நாளை எடுத்து செல்லப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் ஹெலிகாப்டரில் இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம். இவர் உத்தரகாண்ட் அரசின் தூதராக இருக்கிறார். இதனால் அரசு சார்பாக இவருக்கு ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
உதவாத மக்கள்?
இன்று காலை விபத்து ஏற்பட்ட போது அந்த பகுதியில் மக்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களுக்கு விபத்தில் சிக்கியது பண்ட் என்றெல்லாம் தெரியாது. பிஎம்டபிள்யூ கார் விபத்தில் சிக்கியதும் மக்கள் சிலர் வந்து இவரின் காரில் இருந்த பேக்கை எடுக்க முயன்றதாக கூறப்பட்டது. இவரை காப்பாற்ற முயற்சிக்காமல் பேக்கை எடுத்து செல்ல முயன்தாக கூறப்பட்டது. காரில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை திருட முயன்றதாக எடுக்க முயன்றதாக கூறப்பட்டது. . இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர். மக்கள் யாரும் அவரின் பணத்தை திருடவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர். கார் அந்த நேரம்தான் தீ பிடித்து உள்ளது.
உதவி செய்த ஊழியர்கள்
உள்ளே மாட்டிக்கொண்ட பண்ட் ஜன்னலை உடைத்து வெளியே வர முயன்று உள்ளார். பாதி உடைந்த ஜன்னலை கஷ்டப்பட்டு மேலும் உடைத்து பண்ட் வெளியே வந்துள்ளார். அதற்குள் காரும் தீ பிடித்து முழுமையாக எரிந்துள்ளது. அந்த நேரத்தில் அங்கு ஹரியானா சாலை பணியாளர்கள் வேலை பார்த்துள்ளனர். இவர்களின் பேருந்து அங்கே சென்றுள்ளது. இவர்கள் மொத்தமாக இறங்கி வந்துள்ளனர். இவர்கள்தான் பண்டை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே சிதறிக்கிடந்த பணக்கட்டுகளை எடுத்து இவரிடம் பத்திரமாக அவர்கள்தான் ஒப்படைத்து உள்ளனர். அவரின் பணம் மொத்தமாக பண்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது.