மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை
புதுக்கோட்டை: மாணவர்கள் முதலில் தாய் மொழியில் தான் அடிப்படை கல்வியை கற்க வேண்டும் என்றும், அதன்பிறகு அவர்களுக்கான மொழியை மாணவர்கள் தேர்வு செய்வார்கள் என்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அப்போது அவர் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

என்ஜினீயரிங் மாணவர்கள் தேவை அதிகமாகும்
பல்வேறு பொருள்களுக்காக உலக நாடுகள் சீனாவை நம்பி இருந்தது. ஆனால் தற்போது உலக நாடுகள் தங்களுக்கு தேவையான பொருள்களை தாங்களே சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் என்ஜினீயரிங் மாணவர்களின் தேவை அதிகரிக்கும். சமீப காலமாக என்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிக வாய்ப்பு உள்ளது
தற்போதைய காலத்தில் விவசாயத்தில் கூட அறிவியலை பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. அறிவியலை பயன்படுத்தி விவசாயம் செய்யும் சூழல் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதேபோல் தொழில்நுட்பத்தை சரியாக, முறையாக மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்ல பாதைக்கு செல்ல முடியும்..

தாய் மொழியில்..
முறையாக பயன்படுத்தவில்லை என்றால் தான் தவறான பாதைக்கு தான் இழுத்து செல்லப்படுவார்கள்.. இவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை கல்வியை மாணவர்கள் தன் தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகே மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம். இணை மொழியான ஆங்கிலத்தை பிறகு
கற்றுக் கொள்ள முடியும். அவர்கள் மீது மொழியை திணிக்க முடியாது. நான் தாய் மொழி தமிழில் தான் படித்தேன்.. இதுவரை எங்கேயும் சிரமத்தை உணர்ந்ததில்லை.

இணையதள வழி முறைகேடுகள்
இணையதள வழி முறைகேடுகள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்ற போதிலும் குற்றங்களை குறைக்க இணையதளங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விரைவில் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. குலசேகரப்பட்டினம் மற்றும் சிறிய ஏவுகணை தளம் ஆகியன உருவாக்கப்பட்டதும் இஸ்ரோவால் அதிக அளவு ராக்கெட்டுகளை தயார் செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications