"உன் உயிர் ஊஞ்சலாடுது.. உனக்கு சாவு நெருங்குது".. இளம்பெண் கடத்தலில் கணவரின் பகீர் ஆடியோ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கணவரால் கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தாய் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய உமா, மாரிமுத்துவை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். திருமணமான புதிதில் உமாவுக்கு வாழ்க்கை சொர்க்கம் போல் இருந்தது. ஆனால் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாள் என சொல்வார்களே அது போல் அவருக்கு மாரிமுத்துவின் சுயரூபம் திருமணமான 4 மாதங்களில் தெரிந்தது.
உடனே தனது தாயை தொடர்பு கொண்ட மகேஸ்வரி, தனது கணவன் சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் தன் மீது எப்போது பார்த்தாலும் சந்தேகப்படுவதாகவும் ஏதாவது எதிர்த்து கேட்டால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவின் தாய் தனது உறவினர்களை அழைத்து கொண்டு மகளின் வீட்டிற்கு சென்றார்.
சந்தேகப்படும் இடத்தில் என் மகள் வாழ வேண்டாம் என மாரிமுத்துவிடம் இருந்து உமாவை பிரித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது மாரிமுத்து "என் வீட்டை விட்டா போற, நீ எப்படி உயிரோடு இருக்கேனு பார்க்கிறேன்" என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு காரில் சில நபர்களுடன் உமாவின் தாய் வீட்டிக்கு வந்துள்ளார்.
அப்போது தாயுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த உமாவை வழிமறித்து கடத்திச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவின் தாய் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்து ஒரு மாதமான நிலையில் இதுவரை தனது மகளை கண்டுபிடித்துத் தரவில்லை என்பதால் அச்சமடைந்த உமாவின் தாய் , நேற்றைய தினம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது கணவரை பிரிந்து உமா தனது தாய் வீட்டில் வசித்த போது மாரிமுத்து கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோவை போலீஸாரிடம் தாய் போட்டு காட்டினார். அதில் உன் உயிர் ஊஞ்சலாடுது, மரணம் நெருங்குது என மிரட்டிய ஆடியோ வெளியானது. எனவே தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications